நடிகை சமந்தா அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
சமந்தாவும், அவரது கணவர் நாகசைதன்யாவும் இணைந்து நடித்துள்ள மஜ்லி என்ற தெலுங்கு திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, சமந்தா, நாகசைதன்யா மற்றும் திரைப்படக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர்.
திருமணத்துக்குப் பின் சமந்தாவும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படம் என்பதால் இருவரும் இணைந்து கோயிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.
முன்னதாக, சமந்தா உள்ளிட்டோர் திங்கள்கிழமை இரவு அலிபிரி நடைபாதை வழியாக படியேறி திருமலையை அடைந்தனர். இவ்வழியாக அவர்கள் 2 மணிநேரத்தில் திருமலைக்கு வந்தனர்.