திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் பிரசித்தி பெற்ற சித்திரை வசந்த உற்சவம் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 10) தொடங்கி, 10 நாள்கள் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான உற்சவம் வரும் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 9-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயிலின் சம்பந்த விநாயகர் சந்நிதி எதிரே கன்யா லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தினமும் இரவு வேளைகளில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உத்ஸவர் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவின்போது, பொம்மைக் குழந்தை உத்ஸவருக்கு பூக்கள் தூவும் அபூர்வ நிகழ்வும் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 19-ஆம் தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீகோபால விநாயகர் சந்நிதியில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே மன்மத தகனம் நிகழ்வும் நடைபெறுகின்றன.
மேலும், ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தினமும் காலையில் உற்சவம் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.