கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

​2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான..
கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஒரு புதிய வித்தியாசமான போக்கில் காலடி எடுத்து வைப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் புதிய வாய்ப்புகள் தேடிவரும். 

ஏற்றத்தாழ்வுடன் கூடிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியான உயர்வடைவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவும், அரசாங்க செல்வாக்கும் உங்களை அமோகமாகக் கைதூக்கி விடும். தெய்வ வழிபாட்டினால் கைமேல் பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். வருமானம் படிப்படியாக உயரும். 

உடலாரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அத்தகைய விசா கிடைத்து விடும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். புதிய நவீன சொகுசான வாகனம் வாங்குவீர்கள். நிர்வாகத் திறன்  கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் இணக்கமானச் செயல் படுவீர்கள். அவர்களால் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் சேர்ந்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலர் தெய்வ  பிராத்தனைகளை முன்னிட்டு அதிக செலவு செய்து நிம்மதியடைவார்கள். மற்றும் நீண்டதூர தல யாத்திரை சென்று வரவும் யோகமுண்டு.

தானங்கள் வழங்கியும் மகிழ்ச்சியடைவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். எவருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது, முன்ஜாமீன் போடுவது கூடாது. எவ்வளவு வெற்றி அடைந்தாலும் தற்பெருமை பேசக் கூடாது. கடினமான உழைப்புக்கேற்ற இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். 

தேவையான நேரத்தில் தக்க சலுகைகள் தேடிவரும். பொதுமக்கள் தொடர்புள்ள வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் எந்த தொல்லையும் ஏற்படாது. இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த தமிழ்வருடப் பிறப்பான விகாரியில் மேலதிகாரிகளால் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பை உங்களின் தாரகமந்திரமாக கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழகவும். அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல அனுகூலங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் பாக்கிகளும் வசூலாகிவிடும். கொடுக்கல் வாங்கல்களில் முன்னேற்றமான திருப்பங்கள் காண்பீர்கள்.

நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். அவர்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அந்நியர்களை நம்பி புதிய கடன்களை கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். கை நழுவிப்போன குத்தகை திரும்பக் கிடைக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகளுக்கு  இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மனதில் புதிய  நம்பிக்கை உண்டாகும்.  உங்கள் பொறுப்புகளை கவனத்துடன் செய்வீர்கள். மக்கள் சேவையில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவர். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில்  காரணமில்லாமல் மனதில் சிறிது அமைதி குறையும். பெரியோர்கள் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். பிள்ளைகளாலும் பெருமை அடைவீர்கள். பணவரவும் இந்தக் காலக்கட்டத்தில் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களையே பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் தேவைகள் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து அனைவரிடமும் நட்புடன் பழகுவது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் நலம் பயக்கும்.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சியும் வருமானத்தில் உயர்வையும் காண்பீர்கள். சேமிப்புகள் உயரும். இதனால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். தற்போதுள்ள குழப்பமான நிலை மாறி நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். 

அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். அதன் மூலமும் வருமானம் வரத்தொடங்கும். முக்கிய விஷயங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். 

பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில்  வெற்றி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். தீராத பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து போய்விடும் காலகட்டமிது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உடன்பிறந்தோரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வசிக்கும் வீட்டிற்கு பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்திலும் சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும்.

பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். நேர்வழியில் காரியங்களைச் செய்து புதிய இலக்குகளை எட்டுவீர்கள். பழைய காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த தொழிலை மறுபடியும் புதுப்பித்து தொடங்குவதற்கான மாற்றுத் திட்டங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். 

மகான்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளையும் பெறுவீர்கள்.  தக்க நேரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து  உதவியும் அதிர்ஷ்ட வாய்ப்பும் கிடைக்கும். கடந்த சில காலமாகவே தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அவைகளிலிருந்து முழுவதுமாக விடுபடுவார்கள். உங்களை எதிர்த்தவர்கள் மறைந்து விடுவார்கள். 

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகள், தர்மகாரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு புத்தாண்டு விகாரி வருடத்தில் அலுவலக வேலை யாவும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். 

வேலைகளைக் கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். பெரிய கடன்கள் வாங்கி வியாபாரத்தையும் பெருக்க வேண்டாம். கூட்டுத்தொழில் செய்வோர் நண்பர்களிடம் உஷாராக இருக்கவும். விவசாயிகளுக்கு கொள் முதல் அதிகரிக்கும். விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் உழைப்பையும் அதிகம் நம்புவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். எதிர்கட்சியினருக்கு சாதுர்யமாக பதிலளிப்பீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கு கூடும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். சமூகத்தில்   பெயர், புகழ் உயரும். சக கலைஞர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதி காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். 

மாணவமணிகள் சுறுசுறுப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்வீர்கள். 

பரிகாரம்: "ஓம் நமோ நாராயணா' மந்திரத்தை உச்சரித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பலவகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். உங்கள் காரியங்களை ஆரவாரம் இன்றி அடக்கமாகச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விழிப்புடன் இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். அனைவருடனும் பாகுபாடு பார்க்காமல் நடந்துகொள்வீர்கள். 

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். எவருடன் நீங்கள் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்களைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களை சுலபமாக முடித்து வெற்றி பெற்று விடுவீர்கள். அரசாங்க சலுகைகளைச் சுலபமாக அடைந்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தானாவே நீங்கி விடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த வீண் சஞ்சலங்களும் குழப்பங்களும் மறையும். எப்படி நடக்குமோ என்று எண்ணியிருந்த காரியங்கள் எந்த வித தடங்களுமின்றி சுலபமாக நடந்தேறும். சமூகத்தில் உயர்ந்தவர்களோடு நல்லுறவு ஏற்படும். மூத்த உடன்பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள். 

மறைமுகமாக உங்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்த எதிரிகளை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று நிறைவேறும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். சிலருக்கு புதிய நிலம் வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். நுணுக்கமான அறிவால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையையும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தடையில்லாமல்  முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு இரட்டிப்பாகக் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களாலும் பணவரவு உண்டாகும்.  சக ஊழியர்களின் உதவியுடன் வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவர். பகைமை பாராட்டும் சக ஊழியர்களிடம் மனம்விட்டு பேசி இணக்கமாகி விடுவீர்கள்.  வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் பெற்றி பெற்றாலும் கொடுக்கல் வாங்கல்களில் சம நிலையையே காண்பீர்கள். 

கடன்களை உடனுக்கு வசூலிப்பது நல்லது. வியாபார யுக்திகளைச் செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளை பொறுமையுடன் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். தேவையான விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். விவசாயத்தில் புதிய யுக்திகளையும் முறைகளையும் புகுத்துவீர்கள். ஊடுபயிர்களையும் பயிரிட்டு லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாக நடந்து கொள்வார்கள். கோபப்படாமல் விட்டுக்கொடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த பெயர், புகழ் பெறுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு பிரச்னைகளைத் தகர்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். 

அனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்ளவும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நல்லபடியாகவே நடந்தேறும். சில இடையூறுகள் தோன்றினாலும் குறிக்கோளை நோக்கி தைரியத்துடன் முன்னேறுங்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: "மகாதேவ மகாதேவ; என்று ஜபித்து ஈஸ்வரனை தரிசித்தால் சிறப்புகள் கூடும்.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி தென்படும். சுபச்செலவுகளைச் செய்ய நேரிடும். உபரி வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.  பரஸ்பர நிதி திட்டங்களிலும் சேர்வீர்கள். 

வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தினர் அனைவரின் அன்பும் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தெளிவான மனதுடன் இருப்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சிலர் சொந்த வீட்டிற்குக் குடி பெயர்வீர்கள். 

போட்டி பந்தயங்களிலும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவைகளிலும் ஆதாயம் கிடைக்கும். முரண்டுபிடித்த நண்பர்களை உங்கள் வழிக்கு கொண்டு வருவீர்கள். குழந்தைகளை விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ப்பீர்கள். உங்கள் உடலுழைப்பிற்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். கடுமையாக உழைப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும். 
ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளை நன்கு பரிசீலித்த பிறகே செயல்படுத்துவீர்கள்.  

மேலும் திட்டமிட்டு படிப்படியாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சில திட்டங்களைச் செய்வீர்கள். வம்பு வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான தீர்ப்புகள் வரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். மேலும் எதிர்பார்த்த அசையும் அசையா சொத்துகள் சேரும். உங்கள் பெயர், புகழ் உயரத்தொடங்கும். மற்றவர்களை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். உங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உங்களின் தகுதிக்கு மீறி உதவி செய்து மகிழ்வீர்கள். 

உங்களை எதிர்ப்போரை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளை முதலீடு செய்யாமல் அறிவை மட்டுமே துணை கொண்டு செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்திலும் குதூகலம் நிறையும். உற்றார் உறவினர்களும் உங்கள் இல்லம் தேடி வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி நட்புடன் நடந்துகொள்வார்கள். வேலைகளை திட்டமிட்டது போல் முடிப்பீர்கள். இந்த ஆண்டு முழுவதும் மனதில் காரணமின்றி ஒரு பயம் அவ்வப்போது வந்து போகும். 

வியாபாரிகளுக்கு அரசாங்கத்திலிருந்து சில அனுகூலங்கள் கிடைக்கும். எதிரிகள் அடங்கி நடப்பார்கள். வியாபாரத்தைச் சிறப்பாக நடந்தி முடிப்பீர்கள். வெளியிலிருந்து கடன்கள் வாங்கி வியாபாரத்தை பெருக்குவீர்கள். கூட்டாளிகள் சற்று பாராமுகமாக நடந்துகொள்வார்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். 

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பழைய குத்தகைபாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களைத் திருப்திப்படுத்தும். 

அரசியல்வாதிகள் இன்முகத்துடன் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்கள் அனைத்தும் தற்போது சாதனைகளாகும். முக்கிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். தகுதிக்குக் குறைவானவர்களிடம் சேர்க்கை வேண்டாம். பெண்மணிகள்குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உடலும் மனமும் பலப்படும். 

ஆன்மிக நாட்டம் கூடும். ஆடை, ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் விளையாட்டைக் குறைத்துக்கொள்ளவும். அவசரப்படாமல் சிறிது நிதானமாக நடந்துகொள்ளுங்கள். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் படிப்பில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தவும்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வணங்குவதோடு, குலதெய்வ வழிபாட்டையும் தவறாமல் செய்யவும்.

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com