திருமலையில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் மாடவீதியில் வலம் வந்தார்.
ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை சீதை, லட்சுமணர். அனுமார் சமேத ஸ்ரீராமருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பழரசம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின் உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்து தூப, தீபங்கள் காட்டி நைவேத்தியம் சமர்ப்பித்தனர். இந்த வழிபாட்டில் திருமலை ஜீயர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு ஸ்ரீராமர் அனுமந்த வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அனுமந்த வாகனச் சேவையைக் காண பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீராமநவமி ஆஸ்தானம் நடைபெற்றது. அப்போது உற்சவமூர்த்திகளுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி வசந்தோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.
மேலும் திருப்பதி, சந்திரகிரி, வாயல்பாடு மற்றும் கடப்பாவில் உள்ள தேவஸ்தானம் நிர்வகிக்கும் ராமர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.