திருமலை ஏழுமலையானை சுப்ரபாத சேவையில் புதன்கிழமை காலை இலங்கை அதிபரும் அவர் மனைவியும் தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா செவ்வாய்க்கிழமை மதியம் திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்தனர். மாலையில் அவர் மனைவியுடன் திருமலையில் உள்ள வணிக வளாகத்தில் பக்தர்களுடன் இணைந்து ஷாப்பிங் செய்தார். புதன்கிழமை காலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற இலங்கை அதிபரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தானஅதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து வேதஆசீர்வாதம் செய்வித்து ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். இலங்கை அதிபருடன் இலங்கை தூதரக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, புரோட்டோகால் கூடுதல் செயலர் லெப்டினன்ட் கர்னல் அசோக்பாபு உள்ளிட்டோர் ஏழுமலையானைத் தரிசித்தனர்.
அதன்பின் திருமலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு திருப்பதி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.