கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

12 ராசிக்காரர்களுக்குமான  விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர்..
கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

12 ராசிக்காரர்களுக்குமான  விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் கூடி வரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வாழ்க்கைக்கு பலமானதொரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்டு விடுவீர்கள். எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் முடியும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். 

நண்பர்களின் பயன் கருதாத உதவியினால் ஒரு படி மேலும் முன்னேற்றம் அடைவார்கள். சுய கௌரவத்தை விட்டு விடாமல் காரிய மாற்றுவீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களையும் கொண்டு வருவீர்கள். கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறாமல் தடைபட்டு வந்த சுபகாரியங்கள்சட்டென்று நடந்து முடிந்துவிடும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். 

அசையாச் சொத்துகள் விஷயத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சொத்துகள் கைவந்து சேரும். வாகன வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். கௌரவம் மேன்மேலும் கூடும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடுவீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்களால் புதிய வாய்ப்புகளைச் செயல்படுத்த அனுமதியையும் பெறுவீர்கள். 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் தொழிலில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள். சகலமும் தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதவரைப் போல பாவனை செய்து ஒவ்வொன்றையும் தீர்க்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள். பொருளாதாரம் வளம் மேம்படும். அரசு துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுகம் கூடும். 

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறப்பும் உண்டாகும். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய தொழில்களையும் சுலபமாகதத் தொடங்கிவிடுவீர்கள். திட்டங்களை சர்வசாதாரணமாகச் செயல்படுத்தி விடுவீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகளும் நீங்கிவிடும். 

பங்கு வர்த்தகத் துறையிலும் ஈடுபட்டு உபரி வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய மனிதர்களைச் சந்தித்து அதன்மூலம் ஒரு புதிய வாழ்க்கை பயணமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். தேகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். உடல்நலம் மனவளம் மேம்பட யோகா பிராணாயாமம் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் இந்த விகாரி ஆண்டில் இடைவிடாமல் உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் வேலையில் பளுவும் இருந்தாலும் திட்டமிட்டு அவைகளை முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் பெறுவீர்கள்.  வண்டி, வாகனம் வாங்க அலுவலகத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு கிடைக்கும். வருமானமும் படிப்படியாக வளரும். 

வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். பழைய சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் சற்று கடுமையாக இருக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். வங்கியில் கடன் வாங்கி புதிய பயிர்களையும் பயிரிடுவீர்கள். கொள் முதல் லாபம் அபாரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். தொண்டர்களிடம் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். ஊதிய உயர்வு மற்றும் பாராட்டையும் பெறுவீர்கள். 

கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பெண்மணிகள் ஆடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருப்பதை எவரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மனதிற்கினிய பயணங்கள் செய்வீர்கள். மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிறிய முயற்சிகளிலும் பெரிய லாபம் கிடைக்கும். 

பரிகாரம்: ராமபக்த அனுமனை "ராம் ராம்' என்று ஜபித்தபடி சுற்றி வந்து வழிபடவும்.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடு காண்பீர்கள். வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய வண்டி வாகனங்களை வாங்கும் யோகமுண்டு. நண்பர்களின் பேச்சின் உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் சூட்சும அறிவு பலப்படும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளாக விற்காமலிருந்த பூர்வீகச் சொத்து விற்பனையாகும். உங்கள் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். சமூகத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

உங்கள் ரகசியங்களை எவரும் அறியாமல் காப்பீர்கள். மனதில் இருந்த சோர்வு மறையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய சூழ்நிலைகளுக்கேற்ப உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் கோபப்பட்டாலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டிய  காலகட்டமிது. அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் உங்கள் தலையை நுழைக்காமல் " கொக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்பட்டால் வேறு சிரமங்கள் எதுவும் ஏற்படாது. 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணமுடை என்கிற பேச்சுக்கே இடமிராது. தீவிர முயற்சியின் பேரில் பணம் பெற்று புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பம் கிட்டும். வெளியூரிலிருந்து வரவேண்டிய பண நிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். கொடுக்க வேண்டிய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள். 

குலதெய்வ வழிபாடுகளை முறையாகச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புகழ், கீர்த்தி, கௌரவம் , செல்வாக்கு யாவும் மேன்மேலும் அதிகரிக்கும். மறுமண வாழ்க்கை நன்றாக அமையுமா என்று கவலைப்பட்டிருந்தவர்களுக்கு நல்லபடியாக மறுமணம் நடக்கும். 

வம்சவிருத்தியும் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகச் சிறிது கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வங்கிகளில் அடமானம் வைத்திருந்த பொருள்களை மீட்டு வருவீர்கள். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணையும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த விகாரி ஆண்டில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பார்கள். கடமை தவறாமல் உழைக்கவும். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையை காண்பீர்கள். கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். பழைய வியாபாரத்தில் போட்டிகள் சற்று கடுமையாக இருக்கும். 

விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். விவசாயப் பணிகளைச் செய்து முடிப்பதில்  சிறிது தாமதம் ஏற்பட்டாலும் முடிவு வெற்றியாகவே முடியும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். புதிய மாற்றுப்பயிர்களையும் பயிரிட்டு லாபம்  பெருக்கலாம். 

அரசியல்வாதிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு வகுத்துக் கொண்டு செயலாற்றுவீர்கள். கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை வைத்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரிங்களில் கவனத்துடன் ஈடுபடவும். கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவை பெறுவீர்கள். 

பணவரவுக்கும் குறைவு வராது. சமூகத்தில் வரவேற்புகள் அதிகரிக்கும். எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்மணிகள் போதும் என்கிற  மனநிறைவைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள்.  மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதற்கு இது உகந்த நேரம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். யோகா, பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியம் காக்கவும். 

பரிகாரம்:  கால பைரவரையும் சனீஸ்வரரையும் வணங்கி நலம் பெறவும்.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒரு முக்கியமான விஷயத்தில் முடிவு ஏற்படும். எடுத்த காரியங்களில்  பெருமளவு வெற்றியும் விவாக சம்பந்தமான நிச்சய தாம்பூலம் முதலியன ஏற்படும். பணப்புழக்கம் ஓரளவு சரளமான முறையில் காணப்படும். சிறிது தூரப் பிரயாணங்களையும் செய்வீர்கள்.

சொத்து சம்பந்தமாக ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். பாகப்பிரிவினையும் சுமுகமாக முடியும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்கத்தால் சில நன்மைகளும் உண்டு. சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்பட தாமதமாகலாம். கடினமாக உழைக்க வேண்டியும் இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவு தேடி வரும். உடன்பிறப்புகள் இணக்கமாக பழகுவார்கள். சிலருக்கு பட்டப் பதவிகள் கிடைக்கும்.

ஒரு புதிய விஷயங்கள் அனுகூலமாக முடியும். தற்சமயம் செய்துவரும் தொழிலுடன் ஒரு நூதனத் தொழில் ஏற்படுதல் போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளுக்காக தருமம் செய்வீர்கள். புனித ஆலயங்களுக்குக்கும் சென்று வரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயலாற்றுவீர்கள். பூமி, நிலம், வீடு போன்றவற்றில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாகும். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான நிலைமை ஏற்படும். இல்லத்தில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். போட்டி பொறாமைகள் அனைத்தும் மறைந்து நற்பலன்கள் உண்டாகும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். புதிய தொடர் சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தன சேர்க்கை உண்டாகும். 

குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் கருணையோடு நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். செயல்களை அவசரப்படாமல் விவேகத்துடன் செய்துமுடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். உங்கள் பொறுப்புகளை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. மனத்தளர்ச்சிக்கு இடம்  தராமல் நடந்து கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் வருமானம் திருப்திகரமாக கிடைக்கும். 

மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் தோன்றினாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  விவசாயிகள் மகசூல் மந்தமாக இருக்கும். விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையின் மூலம் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வது நல்லது. 

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து  தப்பித்து விடுவீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள். திட்டமிட்ட பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடைந்துவிடும். நெடுநாளைய லட்சியம் பூர்த்தியாகும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு பிரச்னைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். 

புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சிரத்தையாக படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள். கடுமையாக உழைப்பீர்கள். விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும். 

பரிகாரம்: பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் தாயாரை வழிபடவும்.

{pagination-pagination}

மீனம்(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் முன்னேற்றமடையும். வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்ட காலம் புத்திரப் பேறு இல்லாது இருந்தவர்களுக்கு புத்திர ப்ராப்தி உண்டாகும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். இனம்புரியாத மனக்குழப்பம், பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே முடியும். அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு கிடைத்து அதனால் நன்மைகள் ஏற்படும். 

நீண்ட நாள்களாகத் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும் வாய்ப்புண்டாகும். சிலருக்கு கடல்கடந்து அயல்நாட்டுக்குச் சென்று வரக்கூடிய பாக்கியம் ஏற்படும். சிலர் புதிய வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வார்கள். அதிர்ஷ்ட முதலீடுகளைச் செய்வீர்கள். அரசு வழியில் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களுக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது. 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் சொல்வாக்கு செல்வாக்கு இரண்டும் சிறப்பாக அமையும்,. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பழைய சொத்துகள் உயர்வான விலைக்கு விற்று புதிய  அசையா சொத்துகளை வாங்குவீர்கள். 

மாறுபட்ட கருத்துடையவர்களை உங்களின் பேச்சாற்றலால் வசப்படுத்திக் கொள்வீர்கள். எவருக்காகவும் தனிப்பட்ட கொள்கைகளை விட்டுவிட மாட்டீர்கள். குழந்தைகள் முன்னேற்றப் பாதையில் செல்ல ஊக்கப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களை நாடி அவர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். 

வருமானம் பலவழிகளிலும் கைவந்து சேரும். பங்குவர்த்தகத்தின் மூலமும் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை ஜாம் ஜாம் என்று நடத்துவீர்கள். தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் புத்திசாலித்தனம் கூடும். தன்னம்பிக்கையுடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். தீயோர்களின் சேர்க்கையை தவிர்த்து விடவேண்டிய காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த விகாரி புத்தாண்டில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்ய வேண்டி வரும். வியாபாரிகள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். பழைய கடன்களையும் அடைத்து விடுவீர்கள். 

கூட்டாளிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். விளைச்சலில் பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்தவும். விவசாய உபகரணங்களை வாங்கி முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து விடுவார்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாக மாறி விடுவார்கள். திட்டமிட்ட பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடையும். நெடுநாளைய லட்சியம் பூர்த்தியாகும். கலைத்துறையினர் தற்போது ஏற்ற இறக்கங்களை காண்பார்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். இந்த காலகட்டத்தில் மனதில் காரணமில்லாமல் அமைதி குறையும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.

******

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் முதல் நான்கு (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ராசிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com