குருபகவான் விகாரி வருடம் சித்திரை மாதம் 10-ம் தேதி(23.04.2019) விடியற்காலை 01.30 (ஐஎஸ்டி) மணிக்கு அதிவக்கிர கதியில் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அதன்பின்பு, 12.08.2019 அன்று விடியற்காலை 04.43 மணிக்கு குருபகவான் வக்கிரமடைகிறார். அதன்பின்னர், (05.11.2019) விடியற்காலை 05.16 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
பொதுவாக, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆறுவிதமான பலம் (ஷட்பலம்) சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமானது நைசர்க்கிய பலம். அதாவது, இயற்கை பலம் அல்லது இயற்கைத் தன்மை என்பதாகும். அந்த அடிப்படையில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் (வளர்பிறை) பகவான்கள் இயற்கை சுபர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்த இயற்கை சுபர்களில் குருபகவானை முழுச் சுபர் என்று அழைக்கிறார்கள்.
1- ல் அஸ்தங்கம்
2,11-ல் சீக்கிர கதி
3-ல் சமகதி
4-ல் மந்தகதி
5,6-ல் வக்கிர கதி
7,8-ல் அதிவக்கிர கதி
9,10-ல் குடிலகதி
12-ல் அதிசீக்கிர கதி
பொதுவாக, கிரகங்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட தன்மைகளின் படியும் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தகுந்தபடியும் பலன்களைக் கொடுப்பார்கள். குருபகவான் சுப ஆதிபத்தியம் பெற்ற நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் சிறப்பான பலன்களையும், லக்னத்திற்கு சுப ஆதிபத்தியம் பெறாவிட்டாலும் ஸ்தான அடிப்படையில் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் நற்பலன்களையும் ஸ்தான அடிப்படையிலும் நல்ல இடத்தில் அமராமல் இருந்தாலும் சுபாவத்தில் முழுச்சுபராக இருப்பதால் கஷ்டங்களைக் குறைத்து வழங்குவார் என்று கூறவேண்டும்.
இந்தப் பெயர்ச்சி காலத்தில் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்து காணப்படும். செவ்வாய் பகவானின் காரகத்துவங்களான உணவு, நெருப்பு, ராணுவம், காவல்துறை, ரியல் எஸ்டேட், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற துறைகள் வளர்ச்சி அடையும். அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக உயரும்.