கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் முருகன் கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழும் சுவாமிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் இந்த விழா ஏப்ரல் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்த விழா நாள்களில் நாள்தோறும் காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சண்முகசுவாமி வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு வீதிகளிலும் தேர் உலா சென்று, பிற்பகலில் நிலையை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.