திருமலையில் நடைபெற உள்ள வராக சுவாமி மகா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணத்துடன் வைதீக காரியங்களை தேவஸ்தானம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயாராகி விட்டன. மகா சம்ப்ரோக்ஷணம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணம் என்ற சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்காக ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழு அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று புற்றுமண்ணை எடுத்து வந்தனர். அதில் பூதேவியின் வடிவத்தை வரைந் அர்ச்சகர்கள், சிலையின் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து பாலிகைகளில் இட்டு அதில் ஊற வைத்த நவதானியங்களை முளைக்க விட்டனர். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திங்கள்கிழமை காலை முதல் வராக சுவாமி கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான வைதீக காரியங்களை அர்ச்சகர்கள் தொடங்கினர். இதையொட்டி 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி மாலை வரை வராக சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.