விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள அருணாபுரத்தில் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 514-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கூத்தாண்டவர் கரக உற்சவம், திருநங்கைகள் தாலிக் கட்டிக் கொள்ளுதல், திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் திருத்தேர் பவனி ஆகியவை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. இதையடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு கூத்தாண்டவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யுத்த கோலத்தில் தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
தேரோட்டத்தின்போது, மேளதாளத்துடன் திருநங்கைகள் நடன நிகழ்வு நடைபெற்றது. தேர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது. பின்னர், மாலை 5.30 மணியளவில் கூத்தாண்டவர் களப்பலி உற்சவம், இரவு 10 மணிக்கு கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் காட்டுக் கோயிலுக்குச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். அரகண்டநல்லூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவாக, வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காட்டுக் கோயிலில் தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
இதேபோல, அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்திலும் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.