மதம் மாறும் நபர்களின் கிரக அமைப்பு எப்படி இருக்கும்?

மதம் மாறும் நபர்களின் கிரக அமைப்பு எப்படி இருக்கும்?

மதம் மாறும் நபர்கள் யார் என்றால், அவர்கள், தாம் பிறந்த மதத்தால், எந்த பயனும் கிட்டவில்லையே எனும் ஏக்கத்தில்..

1. மதம் மாறும் நபர்கள் யார் என்றால், அவர்கள், தாம் பிறந்த மதத்தால், எந்த பயனும் கிட்டவில்லையே எனும் ஏக்கத்தில் மாறுபவர்களும், பிற மதத்துக்காரர்கள் வசதியாக வாழ்கிறார்கள் நாமும் ஏன் அப்படி வாழக்கூடாது என்பவர்களும், மாற்று மதப்பெண் / ஆண்களின் மேல் கொண்ட காதலாலும் இவர்கள் மதம் மாறுகிறார்கள் என்று பொத்தாம் போக்காகச் சொல்லிவிட முடியாது. 

இப்படிப்பட்ட சிந்தனைகள் மானிட பிறப்பெடுத்த அனைவருக்குமே தோன்றி மறைவது சகஜம் தான். என்றாலும், ஒரு சிலர் மட்டும் தான் சார்ந்த / பிறந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்ல அவர்களின் ஜனன கால கோள்களின் செய்கைகளால் தான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  

2. மனோகாரகரான சந்திரன் பாதிப்படைந்தவர்களும், புத்திசாலித்தனத்திற்கும் அவர்தம் செயலுக்கும் காரணமான புதன் ஒருவரின் ஜனன காலத்தில் சரியில்லாத போது, இவ்வாறு நிகழ ஒத்துழைக்கிறது. புதன் அஸ்தங்க நிலை அடைந்த ஜாதகத்தினை உடையவர்கள், அதிக தன்னம்பிக்கை உடையவர்களாகவும் அல்லது மந்த புத்தி உடையவர்களாகவும், தாம் செய்வது சரி என்கிற போக்கு உள்ளவர்களாவும் இருப்பர். இப்படிப்பட்டவர்கள் தான் மிக சுலபமாக, மாற்று மத வலையில் சிக்குபவர்கள். 

ஒருவரின் ஜன கால ஜாதகத்தில், இரண்டாம் இடத்தில ராகு நிற்கப் பெற்றவர்கள், இரட்டை நிலை எடுப்பவர்கள் மற்றும் அது வாக்கு ஸ்தானம் என்பதால், தாம் பேசிய வார்த்தைகளை முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களாகப் பேசி அவர்களே அறியாமல் பல காரியங்களை ஆற்றி பின்னர் வருத்தப்படச்  செய்வார்கள். இரண்டாம் இடத்தில் உள்ள ராகு கொண்ட ஜாதகர்கள், இவர்தம் குல சம்பிரதாய வழக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் உள்ள ஜாதகரின் ஜாதகத்தில், குருவின் பார்வை / தொடர்பு ஏற்படுமாயின், அல்லது கோச்சார நிலை அல்லது தசை புத்தி நடக்கும் போது மறுபடி தமது சொந்த மதத்துக்கு மாற  வாய்ப்புள்ளது. 

3. மேலும், இவ்வாறு மதம் மாறுபவர்களை, நமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இது ஒரு மானிட வர்க்கத்தின் சொந்த நிலைப்பாடு மற்றும் உரிமை ஆகும். அவ்வாறு நடந்துகொள்பவர்களை ஒதுக்கி விடுவதால், அவர்களின் எதிர்காலம் பாழாவதோடு இந்த சமுதாயத்திற்கு எதிரிகளாக, ஏன் சிலபோது தீவிரவாத சக்திகளாகக்கூட மாற எத்தனிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

4. வேத கால ஜோதிட குறிப்புகளின் படி, யார் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம், 9-ம் இடத்தில் அமரும் கிரகங்கள் மற்றும் 9-ம் அதிபதி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பின் அவர்கள், நிச்சயம் அவர்களின் குடும்ப சம்பிரதாய வழக்கங்களிலிருந்து விலகிச் செல்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் எனில், இந்த 9-ம் இடம் ஒரு ஜாதகனின் உயிர் காரகத்துவத்தில், தந்தைக்குரிய ஸ்தானம் ஆகும். எனவே இங்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த ஜாதகரின் தந்தைக்கு நேர் எதிரான மனப்போக்கை, இந்த பாதிப்புகள் ஏற்படுத்த வாய்ப்பு. 

5. அதே போல் 9-ம் இடத்தில் உள்ள மாந்தியால், ஒரு புதுவித மாறுபட்ட கருத்தினைக் கொள்ள ஏதுவாகும். இப்படிப்பட்ட சூழல் / கிரக அமைப்பு ஸ்வாமி விவேகானந்தருக்கு இருந்தது. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 9-ம் அதிபதி நவாம்சத்தில் 6, 8, 12-ல் மறைந்திருந்தாலோ அல்லது நீச்ச நவாம்சம் பெற்றிருந்தாலோ கூட இப்படி மதம் / பழக்க வழக்கம் மாறுதலுக்கு வழிவகுக்கும். இரண்டாம் அதிபதி அல்லது இரண்டாம் இடத்தில் உள்ள கிரக அமைப்புகள் கெட்டிருந்தாலோ, அதாவது இரண்டாம் அதிபன் பாபர்கள் நடுவில் சிக்கி இருத்தல் அல்லது நிழல் கிரகங்களான ராகு, கேதுகளுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பாக்கிய ஸ்தான அதிபதி இவர்களுடன் இணைந்திருந்தாலோ இவ்வாறு மதமாற்ற எண்ணம் தோன்றுவதில் சந்தேகமில்லை. இருப்பினும் இவை நடந்தேறும் காலம்,  பாதகர்கள் தசை, புத்தி காலங்களில் நடந்தேறும். 

6. மேற்சொன்ன இடங்களில், ராகுவின் தொடர்பு கொண்டிருந்தால், 9ஆம் அதிபனின் தசா, புத்தி காலங்களில் இவை நடைபெறாது முடங்கிப்போகும். அதே சமயம் 9 ஆம் அதிபன் வலுவிழந்த நிலையில், இந்த மதமாற்றம் ஏற்படும் நிலை உருவாகும். லக்கினாதிபதி, 5-ஆம் வீடு, 5-ஆம் அதிபதி நவாம்சத்தில் இவர்களுடன் 9 - ஆம் அதிபனும் பாதிப்பு பெற்றிருப்பின் அப்படிப்பட்ட அமைப்பையுடைய ஜாதகர் மொத்தத்தில் மத சார்பற்று இருப்பார். 

உதாரண ஜாதகம்

இவரின் ஜனன கால ஜாதகத்தின், லக்கினத்திற்கு இரண்டாமிடம். (தனம், வாக்கு, குடும்பத்திற்கான இடம்) இங்கு பாக்கியாதிபதியான சூரியன், மற்றும் 7, 10-க்குரிய புதன், இவர்களின் இணைவு தர்ம கர்மாதிபத்ய யோகம் பெற்றிருந்தாலும், சந்திரன் அட்டமாதிபதியாகி (கெடுதல் செய்பவர்) இவர்களுடன் இணைந்திருப்பது ஒரு பெரிய கெடுதல் ஏதும் நடக்காது. 2, 3-க்குரிய மாரகாதிபதியான சனி தனுசு லக்கின காரர்களை மாரகம் செய்வதில்லை. இருப்பினும் இந்த லக்கின காரர்களுக்கு, ராகு மிகவும் கெடுதி செய்பவர் ஆவார். இவர்கள் அனைவரும் கூட்டணி போட்டு இரண்டாமிடத்தில் இருப்பது ஜாதகரின் பாக்கியத்தைக் குறைப்பதோடு, இவர்தம் குல சம்பிரதாய வழக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கவும் செய்வார்.  

8. அதாவது மத மாற்றத்துக்கு எளிதில் அடிமை ஆவார். இந்து மதத்தில் பிறந்த இவர் முகம்மதிய மதத்திற்கு மாறி அவர்தம் பெற்றோர் உறவினருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்து வருகிறார். இந்த ஜாதகரின் தந்தை என்னிடம் வந்த போது அவரின் மகன் நிச்சயம், தாய் மதம் திரும்புவார் எனக் கூறியுள்ளேன். அதாவது, தற்போது ஜாதகருக்கு, நடக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள ராகு தசை, 9-ஆம் அதிபதியின் புத்தியான சூரிய புத்தியில் இது நடந்தேறும் என்பது நான் கொண்ட ஆய்வுபடி உள்ள கருத்தாகும். அதாவது டிசம்பர் 23-க்குள் இது சாத்தியமாகும். மேலும் அவருக்கான பரிகாரமாக, அவர் வீட்டின் அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, மனமுருக வேண்டி வருவாராயின் அவர் தம் மகனை தமது மதத்துக்குத் திரும்பிவர ஏதுவாகும் என அறிவுரை தரப்பட்டுள்ளது. 
      
இது ஜோதிடம் மட்டும் அல்ல, மனித முயற்சியும், தெய்வ சங்கல்பமும் இணைந்து செயல்படும் என நம்புகிறேன். ஜோதிடம் வெறும் ஒரு குறிப்பு தானே அன்றி அதுவே முடிவாகிவிடாது. எல்லாம்வல்ல சாயி நாதனின் பதம் பணிந்து அமைகிறேன்.

- ஜோதிட ரத்னா சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com