சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 7.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 26-ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.
27-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. 28-ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.