இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 2 - ஆகஸ்ட் 8) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமா
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 2 - ஆகஸ்ட் 8) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எண்ணங்கள் யாவும் ஈடேறும்.  உறவினர்களின் அலட்சியப்போக்கு மனதிற்கு வேதனையை தரும். பெரியோர்களின் ஆசிகள் சாதகமாக அமையும். அனைத்து செயல்களையும் சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளால்  எந்தக் கெடுபிடிகளும் ஏற்படாது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். குறைந்த முதலீட்டில் மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட  பணிகள் சுமுகமாக முடியும். தானியப் பொருள்கள் விற்பனையில் லாபம் குறையும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த பாராட்டுகள் பெறுவீர்கள்.

பெண்மணிகள் சேமிப்பை எடுத்து செலவு செய்ய நேரிடலாம். கணவனுடனான ஒற்றுமையும் சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கவும். துர்க்கைக்கு தீபமேற்றவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 3. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். குடும்பத்திலும் சிறப்புகள் கூடும். முயற்சிகள் அனைத்தும் பரபரப்பான வெற்றிகளைத் தேடித் தரும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகள் திட்டமிட்ட வேலைகளை சுலபமாகச் செய்து முடிப்பார்கள். தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சரியாகத் திட்டமிட்டு காரியங்களைச் செய்யவும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தந்தைவழி உறவுகளில் சற்று பாதகமான நிலைமை ஏற்படும். மாணவமணிகள் வேலைகளை பெற்றோரின் ஆதரவுடன் செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும் ஞாயிறன்று வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 4. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும் சிக்கல்களும் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பலவிதங்களில் ஆதாயம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த  ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளும் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கரும்பு விவசாயிகள் கூடுதல் பலனைப் பெறுவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு  சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்களின் பலம் அதிகரிப்பதால் சற்று விட்டுக் கொடுத்துச் செயல்படவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களுக்காக சில தியாகங்களைச் செய்ய நேரிடும். மாணவமணிகள் சிரம்மேற்கொண்டு பாடங்களை படித்து வரவும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படவும்.

பரிகாரம்:  செவ்வாயன்று அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்:  3, 4.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். சுப காரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்கள் நல்லபடியாக முடியும். குடும்பத்தில் சிரமங்கள் குறைந்து மகிழ்ச்சி நிறையும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடமிருந்து அவநம்பிக்கை அகலும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள். 

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடம் மனம் விட்டுப் பேச வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். தொழிலில் நீண்ட நாள்களாக நிலவி வந்த போட்டி பொறாமைகள் விலகும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமியை நெய்தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். மனதில் சஞ்சலம் ஏற்படும். இறைவழிபாட்டிலும் பிராணாயாமம், யோகா செய்வதிலும் கவனம் செலுத்தவும். பயணங்கள் செய்யும்போது எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகப் பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளை நாடிப் பெறலாம். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றிகளைக் கொடுக்கும். அவசரமாகச் செய்யும் கட்சி வேலைகளில்  இடையூறுகளைக் காண்பார்கள். 

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடி வரும். பெண்மணிகள் கணவரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தட்டுத்தடுமாறி போய்விடும். மெதுவாக இதில் மாற்றங்கள் தென்படும். முயற்சிகள் வெற்றிகளைத் தரும். குடும்பச் சூழ்நிலையில் மாற்றங்கள் நிகழும். ஞானம், பக்தி மார்க்கத்தில் மனம் செல்லும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சாதுர்யமாகச் செய்து முடிப்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் உண்டு. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சில சிக்கல்களைச் சந்திப்பார்கள். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணம் வேண்டாம். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடை ஏற்பட்டு பிறகு வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு  பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்
துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கை நழுவிப்போகும். சக கலைஞர்களை அனுசரித்து நடக்கவும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாட்டில் புதிய யுக்திகளைப் புகுத்திப் பார்க்க வேண்டாம். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த வாரம் உழைப்பு அதிகரிக்கும். எண்ணங்கள் ஈடேறும். பணவரவு இரட்டிப்பாகும். குடும்பத்தில் அனைவரையும் மதித்து நடப்பீர்கள்.  பொருளாதார வளம் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களிடம் நட்புடன் பழகவும். அவர்களின் உதவியும் கிடைக்கும். ஆனால் முக்கிய வேலைகளை அடுத்தவர்களிடம் கொடுக்காதீர்கள். 
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமுடன் இருப்பது நன்மை தரும். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் பெறுவார்கள். தோட்டப்பயிர்களைப் பயிரிட்டும் பலன் பெறலாம். 

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்துச் சென்று நட்பு பாராட்டினால் அவர்களால் நன்மையும் பெறுவீர்கள். 

பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி உண்டு. 

பரிகாரம்: சனியன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகளைப் பெறுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் மூலம் சில சஞ்சலங்களும் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். 
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடித்து பாராட்டப்படுவீர்கள். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள். சக கலைஞர்களும் உதவுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உஷ்ண ஆதிக்க நோய்கள் ஏற்படுமாதலால் உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகள் நல்ல பலன் கொடுக்கும்.

பரிகாரம்: செவ்வாயன்று ஆதிபராசக்தியையும் சேவற்கொடியோனையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சுப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முனைவீர்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகளுடன் சிறிது மனக்கசப்பு உண்டானாலும் பிறகு,  நட்போடு நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடையலாம். கூட்டாளிகளிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடுமையாக உழைத்தால்தான் பலன் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். 
கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைக்க காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு  பணவரவு சீராக இருப்பதால் ஆடம்பரப் பொருள்கள் வாங்குவார்கள். கணவரிடம் ஒற்றுமை பாராட்டவும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் சனீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பர். உடன்பிறந்தோர் வழியில் விட்டுக் கொடுத்து நடக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலையில் சுமை குறையும். மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் காண்பீர்கள். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் அதிகமாக உழைக்க வேண்டி வரும். முயற்சியுடன் உழைத்தால் லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகவும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டு கல்வியில் நாட்டம் செலுத்தவும். 

பரிகாரம்:  வெள்ளியன்று பெருமாள் கோயிலில் தாயாரை மலர்களால் அர்ச்சிக்கவும்.  

அனுகூலமான தினங்கள்: 4, 8. 

சந்திராஷ்டமம்:  2, 3.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். கவலைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாக முடிவடையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் பிடிப்பில்லாத சூழ்நிலை தென்படும். பதவி உயர்வு வராவிட்டாலும் பண வரவுக்கு குறைவு ஏற்படாது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருந்து வரும். புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். 

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும். குத்தகை எடுப்பது போன்றவற்றைத் தவிர்த்திடவும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறாது. கவனமாக இல்லாவிட்டால் எதிர்கட்சிக்காரர்களின் தொல்லைகளைச்சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர்களை அனுசரித்து செல்லவும்.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் கொடுத்தும், ஸ்ரீரங்கநாதரை மனதில் தியானித்தும் வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்:  4, 5.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோர் வழியில் நிலவிய மனக்கசப்புகள் விலகி அன்பு மேலோங்கும். பொருளாதார நிலையில் மேன்மை உண்டு.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் சலுகைகளையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்ல முறையிலேயே நடக்கும். எடுத்த முயற்சிகள் கைகூடும். விவசாயிகள் அதிகமாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். 

அரசியல்வாதிகளுக்கு தசை ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளை அடைவீர்கள். கலைத்துறையினர் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள். 

பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டங்களில் வெற்றி கிட்டும்.  குழந்தைகள், முதியோர்களுக்காக செலவுகள் செய்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் 
செலுத்தவும். 

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்று. சனியன்று பெருமாள் தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4. 

சந்திராஷ்டமம்:  6, 7, 8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com