சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்

சென்னை பெருநகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புராதன கோயில், இது சுமார் 1000 ஆண்டுகள்
சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்


செவ்வாய் பரிகார திருத்தலம்:  ஸ்ரீ தையல் நாயகி உடனுறை ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில் ( பூந்தமல்லி)

சென்னை பெருநகருக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புராதன கோயில், இது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். கும்பகோணத்துக்கு அருகாமையில்  உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நிகரானது. இது சென்னையை (முன்பு தொண்டைமண்டலம் என அழைப்பர்) சுற்றியுள்ள, அங்காரகன் எனும் செவ்வாய்க்குரிய பரிகாரத்  திருத்தலம் ஆகும். இத்திருக்கோயிலை, அங்காரகன் வழிப்பட்ட திருத்தலம். அங்காரகனின் திருப்பாதம் இந்த திருக்கோயிலின் சிவன் சந்நிதானத்துக்கு இடப்பக்கத்தில் துவராகபாலகருக்கு அடுத்து உள்ளது. இந்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட அங்காரகனின் பாதம் சிறிது காலத்துக்கு முன்பு வரை கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு  பனைமரத்தின் கீழ் இருந்துவந்தது. 

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரமாக இந்த கோயிலை செவ்வாய் அன்று வழிபடுவது வழக்கம். இந்த கோயில் மிகப் பெரிய பிரகாரங்களைக் கொண்டது.  அங்காரகன் பூஜித்த பிரதானமான சிவலிங்கம் கிழக்கு நோக்கியும், தெய்வத் தாயார் ஸ்ரீ தையல் நாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். 

கோயிலின் உட்பிரகாரத்தில், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், மற்றும் ஸ்ரீ துர்க்கை போன்ற தெய்வங்களைக் காணமுடிகிறது. வெகு  அரிதானதும், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்ததுமான மூன்று சக்கரங்களான ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக சக்கரங்களை உட்பிரகாரத்தில் காணலாம். நுழைவு வாயில் ஒன்று கிழக்குப் பகுதியில் இருப்பினும் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய ராஜகோபுரமானது, வடக்கு நோக்கியுள்ளது. அழகுவாய்ந்த சிற்ப வேலைப்பாடுகள் நுழைவு வாயிலின் இரு மருங்கிலும் காணலாம். 

ஸ்ரீ சக்கரம், சுப்பிரமணிய சக்கரம் மற்றும் ஷண்முக சக்கரம் இந்த கோவிலின் ஸ்தல விருக்க்ஷம் தாழிப்பனை எனும் பனைமரமாகும். இந்த கோவிலின் தீர்த்தத்தின் பெயர்,  வினை தீர்த்த குளம் என்றே அழைக்கப்படுகிறது. இது கோவிலின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. செவ்வாயின் நட்பு கிரகமான சூரியனின் வழிபாடு ஒவ்வொரு மாசி  மாதத்திலும் 21, 22, 23, 24 மற்றும் 25 தேதிகளில், காலை 6 மணிக்கு, பிரதான சிவலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள், தடைபெறாமல் இன்றளவும் படுவது வியப்பை  அளிப்பதாகவே உள்ளது. மேற்கூறிய இந்த ஐந்து நாட்களைத் தவிர வருடத்தின், வேறு நாட்களில் திரும்பவும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவதில்லை. விசித்திர சிற்ப  வேலைப்பாடுள்ள, இந்த கோவிலை உத்தர வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. 

செவ்வாயின் அதீத பலமே, பெண்களின் ஜாதகத்தில், செவ்வாய் தோஷமாக சித்தரிக்கப்படுகிறது. செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு, சொந்த வீடு இருப்பதே இதற்குச்  சரியான அத்தாட்சி. ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டோடு தொடர்பு இருந்தால், ஆண் குழந்தைகள் உண்டு. அதே 9-ஆம் வீட்டோடு வலுவான செவ்வாய் தொடர்பு  இருந்தால், ஒரு ஜாதகர் தந்தையின் சொத்துக்களைக் கிடைக்கச் செய்வார். அதுவே 10-ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால், ஜாதகரை பெரிய மனிதராக்குவார். 

செவ்வாயால், அதிக கெடுபலன் பெறுபவர்கள் செவ்வாய் தோறும், இந்த ஸ்தலத்தைச் சுற்றி, செவ்வாய் வழிபட்ட ஸ்ரீ வைத்தியநாத ஈஸ்வரரை வணங்கத் தோஷ நிவர்த்தி  ஓரளவுக்கு அடைய முடியும். மேலும், தாய் நாட்டுப்பற்று, இராணுவத்துறைக்கு வேண்டிய போது பல வழிகளில் உதவுவது, இளைய சகோதர, சகோதரிகளுக்கு உதவுவது,  பகைவரை மன்னித்து அவர்களுக்கு உதவுவது, வீரச் செயல்கள் மூலம் இந்த மனித சமுதாயத்திற்கு உதவுவது, பொதுச்சொத்துக்கள் அழியாவண்ணம் பாதுகாப்பது,  ஒருவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவுவது போன்றவையே, உண்மையான நல்ல எதிர்பார்க்கும் பலன்களை உடனுக்குடன், செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகருக்கு அளிக்கும். 

எனவே, இந்த நவக்கிரக பரிகார தலங்களைச் சென்று வழிபடுவதால் மட்டும் நமது தோஷங்கள் விலகிப்போகாது, அங்குச் சென்று வந்ததும் மறுபடி நமது தவறுகளைத்  திருத்திக்கொள்ளாமல் அதனையே செய்யத் துணிந்தால், நிச்சயம் பாதிப்புகள் அதிகமாகும். 

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.  

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com