தஞ்சை புன்னைநல்லுார் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 20 வகையான, 15 டன் மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை(2.8.2019) நடந்தது.
முன்னதாக, நேற்று முன்தினம், தஞ்சை சுற்றுவட்டாரத்திலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்கள், 25 டிராக்டர்களில் ரதம் போல அலங்கரிக்கப்பட்டு புறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து விநாயகர், அம்மன், முருகன் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, தனித்தனியாக ரதத்தில் வைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டது. தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, நேற்று மதியம், தஞ்சை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் பூக்களை கூடைகளில் எடுத்து சென்று அம்மனுக்கு செலுத்தினர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
தகவல்: S.K. வீடியோ, தஞ்சாவூர்