அத்திவரதர் உற்சவத்தின் 41-ம் நாளான இன்று அத்திவரதர் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் பெருவிழா கடந்த 40 நாட்களில் சுமார் 75 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். நின்ற கோலத்தில் 10-ம் நாளான இன்று வெண்மை நிறப் பட்டாடையில் ரோஸ் நீலம் கலந்த சரிகையில், மல்லி மலர், செண்பக மலர், மகிழம் பூ மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
இன்று வார விடுமுறை என்பதால் பல லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் மருத்துவக்குழுவில் பணியாற்ற வந்த மருத்துவர்களும் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.