திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறை காரணமாகப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருபக்கம் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க சாரண நாட்களை விட வார விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதனால், காத்திருப்பு அறையில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி 3 கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் சுவாமி தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகை அதிகரித்ததையொட்டி வாடகைக்கு அறை கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை இன்று இரவு நீடிக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.