திருமலையில் உள்ள நாராயணகிரியில் சத்ரதபனோற்சவம் (திருக்குடை பிரதிஷ்டை செய்யும் உற்சவம்) விமரிசையாக நடைபெற்றது.
திருமலையிலுள்ள உயர்ந்த மலையான நாராயணகிரியில் ஏழுமலையான் தன் பாதங்களை முதன் முதலில் பதித்தார் என்பது ஐதீகம். அதற்கான பாதச்சுவடுகள் மலைப்பாறையில் பதிந்துள்ளது. அந்த இடத்தில் தேவஸ்தானம் ஏழுமலையான் திருப்பாதங்களை ஏற்படுத்தி பூஜை செய்து வருகிறது. அந்தப் பாதங்களுக்கு ஆடி மாதம் துவாதசியன்று தேவஸ்தானம் முறையாக பூஜைகள் செய்து திருக்குடை பிரதிஷ்டை செய்து வருகிறது. அதன்படி திங்கள்கிழமை ஆடி மாத துவாதசியை முன்னிட்டு நாராயணகிரியில் உள்ள ஏழுமலையான் திருப்பாதங்களுக்கு அர்ச்சகர்கள் அபிஷேக ஆராதனைகளை நடத்தி நெய்வேத்தியம் சமர்ப்பித்தனர். அதன்பின், திருக்குடை ஒன்றை அங்கு பிரதிஷ்டை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஆடி மாதம் காற்று அதிகமாக வீசுவதால், காற்றினால் மக்களுக்கு எவ்வித இன்னலும் ஏற்படாதிருக்க வாயுதேவனை பிரார்த்தனை செய்து தேவஸ்தானம் சார்பில் ஆடி மாதத்தில் திருக்குடை பிரதிஷ்டை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.