திருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்தவர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படவில்லை என தேவஸ்தானம் மீது பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
திருமலையில் தொடர் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அதனால் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம், குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வழங்கவில்லையாம்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் குடிநீர், திண்பண்டங்கள், காபி, டீ, குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.
இதனால் பக்தர்கள் தேவஸ்தான நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.