பெண் ஜாதகத்தின் தனித்தன்மைகள் பற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

பண்டைய ஜோதிட நூல்களில், பெண் ஜாதகங்களைப் பற்றி விசேஷமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பெண் ஜாதகத்தின் தனித்தன்மைகள் பற்றி ஜோதிடம் கூறுவது என்ன?

பண்டைய ஜோதிட நூல்களில், பெண் ஜாதகங்களைப் பற்றி விசேஷமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவைகளை இன்றும் ஆய்வுசெய்கையில், சில வியக்கத்தக்க உண்மைகளைக் காணவே முடிகிறது. ஆனால், அவையாவும் உண்மையாகவும் இருப்பதைக் காணநேர்கிறபோது, ஜோதிடம் எனும் மிகப்பெரிய அறிவியலைக் கண்டு சிலபோது அச்சப்பட நேரிடுகிறது. வராஹமிஹிரர், தனது ஜோதிட நூலான, பிருஹத் ஜாதகத்தில், எழுதியுள்ள கருத்துக்களை சிலவற்றை தெரிந்துகொள்வது, தற்கால வளரும் ஜோதிடர்களுக்கு, வழிகாட்டியாக இருக்கும் என கருதுகிறேன். அதற்குப் பிறகு வந்த கல்யாணவர்மர் தமது சாரவளி எனும் நூலில், ஆண் குழந்தை பிறப்புக்கும், பெண் குழந்தை பிறப்புக்கும், உள்ள ஜாதக அமைப்பைக் கூறுவதோடு, ஒரு பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின் வளர்ச்சியைப் பற்றியும் கூறுகிறார். கருச்சிதைவு, பிரசவ காலம் போன்றவற்றையும் தமது நூலில் தெரியப்படுத்துகிறார். 

பாத்திரம் அறிந்து பிச்சை இடு ...!

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு ...!

இங்கு ஏன் பாத்திரம், பெண் என்றெல்லாம் பேசப்படுகிறது என்றால், இவ்விரண்டும் பெறப்படுபவையே ஆகும். அவை இரண்டும் உற்பத்தி ஸ்தானம் இல்லை. ஆம் ஒரு ஆணிடம் இருந்து பெறப்படும், கருவைத்தான் கூறியுள்ளனர். எப்படிப்பட்ட வித்தைப் பெற்று தன்னுள் வளர்த்து, தனது குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்துக்கும் அளிக்கிறாள் என்பதே உட்கருத்து ஆகும். 

பிறக்க இருக்கும் குழந்தை ஆணா / பெண்ணா

ஒருவரின் ஜாதகத்தில், லக்கினம், ராசி, குரு, மற்றும் சூரியன் வலுப்பெற்று, ஆண் ராசியில் அல்லது ஆண் நவாம்சத்தில் இருந்தால், பிறக்க இருக்கும் குழந்தை ஆண் குழந்தை எனப் பலன் சொல்லலாம். அதுவே இரட்டைப்படை ராசியில் ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் இருப்பின் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று பலன் சொல்லலாம். வலுப்பெற்ற குரு மற்றும் சூரியன் ஆண் ராசியில் இருந்தால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும். சுக்கிரன், சந்திரன் போன்றவை இரட்டைப்படை ராசியில் இருப்பின் நிச்சயம் பெண் குழந்தை தான் எனலாம். தற்போதுள்ள சூழலில் எந்த குழந்தைப் பிறந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே சரியான ஒன்றாகும். இங்கு இதனைக் கூறுவது ஏன் எனில், நமது ஜோதிட அறிவியலில் உள்ள நுணுக்கங்களை யாவரும் அறிந்து கொள்வதற்கே ஆகும். 

இரட்டை குழந்தை யாருக்கு

சூரியன் மற்றும் குரு மிதுனத்திலோ அல்லது தனுசிலோ இருந்து புதன் அம்சம் பெற்றிருந்தால், இரட்டை ஆண் குழந்தை நிச்சயம். அதுவே, சுக்கிரன், சந்திரன், செவ்வாய் மீனத்தில் அல்லது கன்னியிலிருந்து புதன் அம்சம் பெற்றிருந்தால், இரட்டை பெண் குழந்தை நிச்சயம்.

ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை

லக்கினமும், சந்திரனும் இரட்டைப்படை ராசியிலிருந்து, வலுப்பெற்ற கிரகத்தின் அம்சம் பெற்று இருப்பின் பெண்ணின் கருப்பையில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை தோன்றும். அதே போல் சந்திரனும், சுக்கிரனும், இரட்டைப் படை ராசியிலிருந்து, அல்லது இரண்டுக்கும் பொதுவான ராசியில் இருந்து வலுப்பெற்றாலும் இவ்வாறு தோன்ற வாய்ப்பாகும். 

கருச்சிதைவு

ஆண், பெண் தாம்பதிய உறவின் போது ஒரு கிரகம் தோல்வி நிலை பெறும்போதோ, அல்லது அந்த மாதத்தின் ஆட்சி செய்கின்ற கிரகத்தின் வலிமை அற்றதாலும், கருச்சிதைவு ஏற்படக் காரணம் ஆகும். மேலும் தாம்பத்திய உறவின் நேரமும் இதற்குக் காரணமாகிறது. அதாவது சனி, செவ்வாய் லக்கினத்திலோ அல்லது சந்திரன் செவ்வாய் அல்லது சனியின் வீட்டில் அமர்ந்திருந்தாலோ கருச்சிதைவு நிகழ ஏதுவாகும். 

இரண்டு முகம், நான்கு கைகள், நான்கு கால்கள் கொண்ட குழந்தை
 
லக்கினத்திற்கு 5 அல்லது 9 இல் புதன் இருந்து மற்ற கிரகங்கள் வலுவிழந்து, காணப்படின் இவ்வாறு, இரண்டு முகம், நான்கு கைகள், நான்கு கால்கள் கொண்ட குழந்தை பிறக்கும் எனக் கல்யாண வர்மர் தனது சாராவளியில் கூறுகிறார். அந்த காலத்தில், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் திருமண நேரம் மற்றும் சாந்தி  முகூர்த்த நேரம் கணித்து பின்னர் தம்பதியினரைச் சேர்த்து வைத்தனர் பெரியோர். ஆனால் இன்று நினைத்ததும் காதல், நினைத்ததும் தாம்பத்திய உறவு, அது சில வேளைகளில் திருமணத்திற்கு முன்னதாகவே கூட நடைபெற்று விடுகிறது. இதனாலேயே சில குழந்தைகளின் பிறப்பில் சில குறைபாடுகள் தோன்றவே செய்கின்றன.

சில விபரீதமான பெண்களின் ஜாதக அமைப்பு

1. ஒரு பெண் ஜாதகத்தில், சனியும் சுக்கிரனும் சம சப்தமத்தில் பரஸ்பர பார்வை பார்த்துக்கொண்டு, சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாம் லக்கினமாகி, நவாம்ச லக்கினம் கும்பமாக இருப்பின், அந்த ஜாதகி காம விகாரம் உள்ளவளும் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போனவளும் ஆண் தன்மைகொண்ட பெண்களைக் கொண்டு காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்பவளாயும் விளங்குவாள். 

2. களத்திர பாவம் சர ராசியாகி, அதைச் சுபக் கிரகங்கள் பார்க்காவிட்டால், மற்றும் அதில் சனியும், புதனும் இணைந்து இருக்குமானால், அந்தப் பெண்ணின் கணவன் திருமணத்திற்குப் பிறகு அவளைத் தள்ளிவைத்துவிடுவான். அதுவே பெண் ராசியானால், அவள் கூடவே வாசிப்பான். உபய ராசியானால் மனைவியைப் பிரிந்து, பொருள் தேடுவதற்காக அடிக்கடி வெளிநாட்டிற்கோ, தூரத் தேசத்திற்கோ போகின்றவனாயும் இருப்பான். 

3. சூரியன் உச்சம், ஆட்சி பெற்றும் சிம்மம், மேஷம் தவிர மற்ற ராசிகள் 7 ஆம் இடமாகி, அதில் சுவரின் பார்வை பெறாமல், சூரியன் இருக்க அந்த ஜாதகி திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கட்டிய கணவனால் கைவிடப்படுவாள்.

4. செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் நவாம்சத்தில் இருக்க, சுக்கிரனுடன் சந்திரன் இருந்தாலும் அல்லது சுக்கிரனையோ அல்லது சந்திரனையோ அல்லது இருவரையுமோ சனி பார்த்தாலும் ஜாதகி தனது கணவனிடம் உண்மையாக இருக்கமாட்டாள். பர புருஷ சகவாசம் இருக்கும். 

5. பலமற்ற சுக்கிரனும், செவ்வையும் களத்திர பாவத்தில் இருக்க, சனி பார்க்க மற்றும் சுக்கிரனோ செவ்வாயோ சனியின் திரிசாம்சத்தில் இருந்தால் அப்பெண் நன்னடத்தை இல்லாதவளாக இருப்பாள். அவர்களுடன் சந்திரன் நிற்குமானால் அவளது கணவனும் அவளுக்கு உடந்தையாக இருப்பான். 

இப்போது சொல்லுங்கள், திருமணப் பொருத்தம் பார்ப்பதென்பது அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயமா இல்லையா என்று. இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் இதனை எல்லாம் ஆராய்ந்து தான் திருமணம் செய்வித்தால் நல்லது. இதனைக் கண்டும் சில இடங்களில் தவறு நேர்கிறது என்றால் அது ஜோதிடரின் பார்வைக்கும் அவரின் அனுபவத்திற்கும் உண்டான சவாலில் ஏற்பட்ட தோல்வி, என்றே கூறவேண்டும். எனவே இந்த திருமணப் பொருத்தம் பார்க்கும் நிகழ்வில் ஒரு ஜோதிடருக்கு இரு ஜோதிடரின் கருத்துக் கேட்டுச் செயல்படுவது பெண்ணைப் பெற்றோரின் கடமை ஆகிறது. 

மேற்சொன்ன கருத்துக்களில், பெண்களை மட்டுமே மையமாக வைத்து ஏற்படும் நிலைகளைக் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆண்களின் ஜாதகத்திலும் பல்வேறு தனித்தன்மைகள் கொண்டு இருப்பதையும் ஜோதிடத்தால் அறிந்து சரியான தம்பதியராய் இணைப்பதுவே சாலச்சிறந்தது. ஆணின் தனித்தன்மைகளை விளக்கும் ஜாதக அமைப்பினை அடுத்த கட்டுரையில் காண்போம். இல்லை எனில் இன்றைய காலகட்டத்தில் குடும்பநல வழக்காடு மன்றங்களில் ஆயிரக்கணக்கான தம்பதியரின் அதிலும் திருமணம் ஆகி ஒருசில மாதங்களிலேயே வருபவர்களும், இரு குழந்தைகளைப் பெற்ற பின்னரும் வரும் தம்பதியினரையும் காணவே முடிகிறது. அவற்றை ஆரம்பக் காலத்திலேயே கண்டு சரிசெய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகிறது. இதனை வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இல்லை எனில் நமது வருங்கால சந்ததியினர் நம்மை நிச்சயம் சபிக்கவே செய்வர். 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com