அத்திவரதர் வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்றுடன் 46 நாட்களாக அத்திவரதர் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அத்திவரத பெருமாளை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 45 நாட்களில் கிட்டத்தட்ட 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், அத்திவரதரை நாளை ஒருநாள் மட்டுமே காண முடியும் என்பதால், அத்திவரதர் பலரும் காணவேண்டும் என்பதற்காகவும் அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்கக் கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்திவரதர் சிலையை வெளியில் வைப்பதில் ஆகமவிதிகள் எதுவும் இல்லாததால் தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. தென்னிந்திய மஹா சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 48 நாட்கள் தான் அத்திவரதர் சிலையை தரிசனத்திற்கு வைக்கவேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை.
கடந்த 1979-ல் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்ட போது, கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் 48 நாட்கள் தரிசன நாட்கள் நீட்டிக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.