வேதத்திற்கு ஒரு பண்டிகை: உபாகர்மா ஏன் செய்யவேண்டும்?

ஆவணி அவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை இதை பூர்வர்கள் உபாகர்மா என்பர்.
வேதத்திற்கு ஒரு பண்டிகை: உபாகர்மா ஏன் செய்யவேண்டும்?


ஆவணி அவிட்டம் என்பது என்ன?

ஆவணி அவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை இதை பூர்வர்கள் உபாகர்மா என்பர். ஆவணி அவிட்டம் என்றால் புது பூணூல் மாற்றிக் கொள்வது என்பது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும் உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையான ஒன்று.  

புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணி அவிட்ட பண்டிகைதான் ஆவணியாவிட்டம் என்று சொல்லப்படும் இந்த பண்டிகை வேதத்தைத் தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

இக்காலத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்து தான் கொண்டாடப்படுகின்றது என அறிந்துள்ளோம் என்றால் அது மிக மிக குறைவானவர்களே சரி இதனை உபாகர்மா என கூறாமல் ஆவணி அவிட்டம் எனக் கூறுவதேன்?

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம். மேலும் ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர். 

உபாகர்மா என்றால் என்ன? 

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம் அதாவது வேதாரம்பம். இதனை 

"ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம்

உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத தேஷ்யாம் 

பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” 

என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார். 

அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பௌர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ரஹ்மச்சாரிக்கும் மற்றுமுள்ள க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதங்களை கற்க ஆரம்பிக்க வேண்டிய நன்னாள். அதாவது வேதாரம்பம் செய்ய உகந்த நாள் என்பது ஆகும். வேத ஆரம்பம் என்றால் வேதத்திற்கு முடிவு உண்டா? இல்லை தோஷம் மட்டும் உண்டாம். 

வேதத்திற்கு தோஷமா? 

ஆம், வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம் (அதாவது மீந்து போய் ஜெலம் விட்ட ஆகாரத்தை 'பழையது’ எனச் சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரியானது இந்த யாதயாம தோஷம்) இந்த தோஷம் நீங்கவே ஆவணி அவிட்டம் என்னும் உபாகர்மா செய்யப்படுகின்றது. 

வேதத்திற்குபோய் 'பழையது' என்ற தோஷம் எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்? வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது. 

நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் (ரிஷிகளோ மகான்களோ அல்ல) வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அப்படி ஒரு தோஷம் வருகிறதாம். உதாரணத்திற்கு நாம் வழிபடும் கோவில்களை எடுத்துக் கொள்வோம். 

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பவித்ரோத்ஸவம் என நாம் ஏன் செய்கின்றோம்? அந்த கோவிலில் நடந்த விழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் நித்திய கைங்கர்யத்தில் ஆசாரகுறைவு தெரியாத தந்திர அபசாரம் என பலவற்றுக்குப் பரிகாரம் காண வேண்டிச் செய்கிறோம்.

அதேபோல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்ட குறை ஓதுவதில் பின்னம் அடைந்த குறை சொல்லுவதில் அக்கறையின்மை வேகமாக சொல்லுதல் என பல விதமாக நாம் செய்த அபசாரங்களை போக்கவே இந்த உபாகர்மா என்னும் ஆவணி அவிட்டம். இந்த உபாகர்மா வைபவத்தில் நாம் மட்டுமல்ல பகவானை தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார்.

வேதத்தை பிரம்மனோ ரிஷிகளோ இயற்றவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஸர்வஞ்னான பகவான் ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது. 

அதற்கான வாக்யம்:

“ஸோ காமாயத! பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”

பகவானின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன்முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார். உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார். 

ப்ரஹ்மாவிற்கு பிறகு அவரது வழிதொன்றல்களான ப்ரஜாபதிகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலானவர்கள் ‘சந்தை’ ‘திருவை’ என தினமும் சொல்லி வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள். 

ப்ரஹ்மா பகவானிடமிருந்து வேதத்தை உபதேசம் பெற்ற நாள் இன்று தான் (ஆவணி அவிட்டம் அன்று தான்), ஆதலால் இது வேதத்தின் ‘உதித்த நாளாக்கான விழாவாகவும்’ கொள்ளலாம்

வேதத்தை கற்றவர்கள் யாராயினும் பகவானை தவிர வேதாத்யயனம் செய்தவர்கள் உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மகிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது. 

ஓய் ஸ்வாமி நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா? என்று சிலர் கேட்பது அடியேன் காதில் விழுகிறது. தேவரீர்கள் வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம் ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும் எதற்காக ஏன்? செய்யனும். அதாவது நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள் மேலும் உச்சாடனம் செய்யும் காயத்ரி மந்திரம் நாம் கலந்துகொள்ளும் பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள் நாம் செய்யும் பிதுர் ச்ராத்தம் போன்ற காரியங்களில் வரும் மந்திரங்கள் என நாம் வருஷம் முழுவதும் பலமுறை பலவித மந்திரங்களை சொல்ல வேண்டியதுள்ளது இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும். 

அதாவது நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்கிறது சாஸ்திரம். இப்போது புரிகிறதா ஆவணிஅவிட்ட உபாகர்மாவுக்கும் வேத ஆரம்பத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என பொதுவாக பிராமணர்களில் ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. 

அதாவது பூணூல் மற்றும் ப்ரம்மோபதேசம் ஆன மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. அந்த பிரம்மசாரி முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்கின்ற யோக்யதை வருகின்றது. உங்களுக்காக உபகர்மா அன்று நாம் செய்யும் சில வைதிக கர்மாக்களில் வரும் சில அற்புதமான விஷயங்கள் ஒரு கிளான்ஸ் முதலில் ஒரு நூதன யக்ஞோபவீத தாரணம் ஏற்கனவே நாம் கூறியபடி வேத ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் வேத முடிவு அதாவது ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் இல்லையா. 

வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக மிக குறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்றையதினம் செய்கிறோம். ஏனெனில் 'காமோகர்ஷித்.. என்ற ஜெபம் ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது. 

அதன் பின் மந்திரங்களை நமக்கு பிரம்மாவிடம் இருந்து ஆதியில் பெற்று தந்த ரிஷிகளையும் தேவதைகளையும் சங்கல்பத்தால் பூஜித்து அவர்களது தபசக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை பெற வேண்டி இந்த ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம். அதனை தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இன்றைய ஆவணி அவிட்ட உபாகர்மா அன்று சொல்லப்பட்டும் மஹா ஸங்கல்பம் மிகவும் உயர்ந்தது. 

அந்த சங்கல்பத்தில் நாம் செய்த செய்யப்போகிற பல பாவங்களும் மனசால் வாக்கால் செய்த தவறான செயல்களுக்கும் நம் இந்திரியங்களால் செய்த தோஷங்களும் நீங்குவதற்கான விசேஷ சங்கல்ப பிரார்த்தனை வாக்கியங்கள் கொண்டது. இந்த ஸங்கல்பத்தை  பக்தி ச்ரத்தையோடு சொல்லுவதால் செய்த பாவம் விலகி நல்ல பலனை சொல்லுபவர்களுக்கு அளிக்கும்.

(பகவான் நம் பாவங்களை போக்க என்ன பாடுபடுகிறான் -அப்பாவை மதிக்காத இக்கால பிள்ளைகள் போல் நாம் தான் அதை உதாசீனம் பண்ணுகிறோம்) அந்த சங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும் புண்ணிய க்ஷேத்ரங்களையும் புண்ணிய நதிகளையும் நாம் நினைவிற்கு கொண்டுவந்து சங்கல்பம் செய்ய வேண்டும். 

நாம் செய்யும் காரியங்களின் பலன் நமக்கு உறுதியாகக் கிட்ட வேண்டுமானால் அதாவது அந்த வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக மாறி நமக்கும் பிதுர்களுக்கும் சந்ததிகளுக்கும் ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் கண்டிப்பாக ஆவணி அவிட்ட நாளில் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும். 

உபாகர்மாவை இன்றைய தினம் ச்ரத்தையாக அனுஷ்டானம் செய்யாவிடில் பாவம் மட்டுமல்ல பலவித தோஷமும் ஏற்படும் சந்தேகமே வேண்டாம். இதை செய்வதால் நம்மிடமிருக்கும் அல்லது நமக்குத் தெரிந்த சொற்ப வேத மந்திரமானது அதனது வீரியத்தோடு நம்முடன் கூடியதாகவிருக்கும் அதன்மூலம் பல ஸ்ரேஷ்டங்கள் கைகூடும். 

- மாலதி சந்திரசேகரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com