அத்திவரதர் குறித்து மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அத்திவரதர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், அந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்குப் பயந்து விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்துவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், அத்திவரதரை பூமியில் புதைத்து மறைத்து வைத்தனர். இப்போது நமக்கு அந்த பயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், மத உணர்வுகளைப் பாதிக்கும் விதத்தில் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் ஆன்லைனில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி விசாரணைக்கு வரும்படி விருதுநகர் மாவட்ட காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.