திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ. 3.02 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.02 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ. 18 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 16 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
81,315 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 81,315 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 38,890 பேர் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்கள் 6 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 11,962 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,984 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 17,581 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 990 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 2,908 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
சோதனைச் சாவடியில் ரூ. 2.09 லட்சம் கட்டண வசூல்
அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 83,901 பயணிகள் சோதனைச் சாவடியை கடந்துள்ளனர். 9,987 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.09 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 12,150 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.