காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் ஆதி அத்திவரதர் இந்தாண்டு பக்தர்களுக்கு 48 நாட்கள் திருக்காட்சியளித்தார்.
அத்திவரதர் 31 நாட்கள் சயன கோலத்திலும், 17 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி கடந்த இரண்டு மாத காலம் காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரத பெருமாள் சயன கோலத்தில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அத்திவரத பெருமாள் நின்ற கோலத்தில் வைக்கப்பட்டபோது அவர் கையில் இருந்த மா. சு. ச என்ற மூன்று எழுத்து பொறித்த கவசம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அத்திவரதரை காணும் பக்தர்களுக்கு பகவான் கையில் அதென்ன "மா.சு.ச" அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று குழப்பித் தவிர்த்தனர்.
பலருக்கு அதைபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. இதையடுத்து இதுகுறித்து கோயிலின் தலைமை அர்ச்சகரிடம் கேட்டபோது, அதற்கு அவர் புரியும்படி மிக அழகாக விளக்கம் அளித்தார்.
பகவத் கீதையின் சுருக்கமே பகவான் கையில் உள்ள "மா.சு.ச". பகவான் கண்ணன் பகவத் கீதையில் "சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச" என்று அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்தார்.
என்னை நம்பி என் திருவடி நிழலில் வருவோரை ஒருபொழுதும் நான் கைவிடமாட்டேன். நிச்சயம் அபயம் அளிப்பேன் கவலைப்படாதே அர்ஜுனா என்று கண்ணப்பிரான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் தான் இந்த மா.சு.சு என்று அவர் குறிப்பிட்டார்.
பக்தர்கள் அனைவரும் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் அத்திவரதர் வலது உள்ளங்கையில் "மா.சு.சு" கவசம் பொருத்தப்பட்டது. சயன கோலத்தில் இருந்தபோது சரியாகத் தெரியாத இந்த எழுத்துக்கள், அத்திவரதர் நின்றகோலத்தில் வைக்கப்பட்டபோது அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.