மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா விசேஷமாகும். இறைவன் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்கள் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழா கொடியேற்றத்தையொட்டி சுந்தரேசுவரருக்கு சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் கொடிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து கொடியை கோயில் ஸ்தானிகப் பட்டர்கள் ஏந்தி வர மந்திர முழக்கங்களுடன், நாதஸ்வரம், மேள, தாளங்கள் முழங்கின. இதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 9.54-க்குள் துலா லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து மாலையில் சந்திரசேகரர் புறப்பாடு நடைபெற்றது.