சென்னை மாநகரில் விருகம்பாக்கம் சின்மயாநகர் அருகில் அமைந்துள்ள நடேசநகரில் மக்கள் வழிபட சிவ-விஷ்ணு ஆலயம் 1969-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைத் திருப்தியாக, மனநிறைவாக அள்ளித்தருபவருமான பிரசன்ன விநாயகர் பிரதிஷ்டைசெய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து நவக்கிரகம், பிரசன்ன மாருதி, ஐயப்பன் சந்நதி, தர்மசவர்த்தினி - இராமராதேசுவரர் சந்நிதி, கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஹயக்கிரீவர், தன்வந்தரி சந்நிதிகள் அமைக்கப்பட்டன. 2017-ல் கொடிமரம் ஸ்தாபிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்திற்கு இராஜகோபுரம் அமைக்க மக்கள் விரும்பினர்.
ஸ்தூல லிங்கமாக விளங்கும் இராஜகோபுரம் 36 அடி உயரம் கொண்டதாக 3 நிலை கோபுரம் ஆக அமைக்கப்பட்டது. இக்கோபுரத்தில் ஐந்து கலசங்கள் மற்றும் 12 விநாயகர், சிவன், விஷ்ணு, முருகன் திருமண காட்சிகளும் சுதை வடிவங்களாக அழகிய வண்ணத்துடன் காட்சிதருகிறது. சைவ - வைணவ ஒற்றுமைக்கு சங்கரநாராயணன் வடிவமும், அர்த்தநாரி - மாதொருபாகன் வடிவமும் சுதை சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றன.
மேலும், நவக்கிரக சந்நிதி திருப்பணி செய்யப்பட்டது. எனவே நூதன இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், நவக்கிரக சந்நிதியில்அஷ்டபந்தன கும்பாபிஷேகமும் நடத்த இறையருள் கிடைத்தது. இதன்படி யாகசாலை அமைக்கப்பட்டு 27.1.19 அன்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 28.1.19, 30.1.19 அன்று உரிய வாஸ்து சாந்தி, கும்பாலங்காரம் மற்றும் யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. 30.1.19 அன்று நான்காம் கால யாகபூஜை, மகாபூர்ணாஹூதி முடிந்து கடங்கள் புறப்பட்டு, மூன்று நிலை இராஜகோபுரகலசங்களுக்கு வழிபாடுகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் காலை 10.30 மணி அளவில் சிறப்பாக நடந்தேறியது.
அதே நேரத்தில் நவக்கிரக சந்நிதியிலும் உரிய வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.யாகசாலை பூஜைகள் ஆலய அர்ச்சகர், ஸர்வசாதகம், க.தியாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் கல்யாண ராமர் சந்நிதியில் அமைந்துள்ளலட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் தன்வந்தரி சந்நிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே பாஞ்சராத்ர ஆகம முறைப்படி யாகசாலை அமைக்கப்பட்டது.29.1.19 அன்று யாகசாலை பூஜைகள் துவங்கின. 30.1.19 அன்று காலை லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் தன்வந்தரி சந்நிதிகளில் புனருத்தோதாரண கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
30.1.19 அன்று இரவு விநாயகர் காஞ்சி மகாசுவாமிகள் வள்ளி, தேவயாணை சமேத சுப்ரமணியர், சிவர்-உமா சகித திருமேனி, சண்டிகேசுவரர், கல்யாணராமர் ஆகிய உற்சவ திருமேனிகள் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா மிகச்சிறப்பாகநடைபெற்றது. இவ்வீதியுலாவில் நாதசுவர கலைஞர்சிவன்வாயில் எஸ்.எம்வெங்கடேசன் குழுவினர் ஆங்கில நோட்ஸ், காவடிசிந்து, குறையொன்றுமில்லை கோவிந்தா போன்ற பாடல்களை நாதசுவரத்தில் வாசிக்ககேட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கும்பாபிஷேக வைபவத்தில் அகிலபாரத ஐயப்பா சேவா சங்கத்தின் பொது செயலாளர் திரு.துரைசங்கர் திரு.கே.சண்முகவேல், கூட்டுறவு சங்கபதிவாளர்திரு. ந.பாலமுருகன் போன்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: கி.ஸ்ரீதரன்
நடேச நகர்