திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம் 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. 

நிகழாண்டில் மாசி திருவிழா ஞாயிற்றுச்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12ஆம் திருவிழா மண்டபத்தில் பூஜை செய்யப்பட்டு யானை மீது கொடிப்பட்ட வீதியுலா நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஞாயிற்றுகிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக பிப் 14ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெறும். ஏழாம் திருநாளான பிப் 16இல் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். 

தொடர்ந்து 8.45 மணிக்கு மேல் ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

எட்டாம் திருநாளான பிப். 17இல் காலை சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும்போது, மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

பின்னர் முற்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.  ஒன்பதாம் திருநாளான பிப். 18இல் சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தேரோட்டம்: பத்தாம் நாளான பிப். 18இல் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. 

காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். பிப் 20ஆம் தேதி இரவு தெப்பத்திருவிழா நடைபெறும். பிப் 21ஆம் தேதி 12ஆம் திருநாளில் திருவிழா நிறைவு பெறுகின்றது.  ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நடைதிறப்பு நேரம்:  திருவிழாவின் முதல் மற்றும் 7 ஆம் நாள்களில் (பிப். 10, 16) அதிகாலை 1 மணிக்கும், பிற நாள்களில் அதிகாலை 5 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படும். இரண்டாம் நாள் மற்றும் திருவிழா நிறைவில் 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். 

பிற நாள்களில் உதயமார்த்தாண்ட அபிஷேகம் மட்டும் 6.15 மணிக்கும், மற்றவை வழக்கம்போலும் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com