திருநள்ளாறு: திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை (பிப்.7) இரவு தொடங்கி, நடைபெற்றுவருன்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ஆம் கால பூஜையும் நடைபெற்றன.
யாகசாலையில் நிறைவாக 8-ஆம் கால பூஜை திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தொடங்கி, காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு பிரதான கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.15 முதல் குடமுழுக்காக புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றும் பணி விமரிசையாக நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முற்கால சோழர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில் இது. மூவரால் பாடல் பெற்ற தலம். கோயிலுக்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய காலத்தில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. குடமுழுக்குக்காக காரைக்கால் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கைக் காண பொதுமக்கள் திரளாக திருநள்ளாற்றில் குவிந்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.