உங்கள் குழந்தைகளும், உங்கள் கர்மாவும்.. ஜோதிடம் மூலம் அறியலாம்!!

முந்தைய பிறவிகளின் சாபங்கள்:- அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்..
உங்கள் குழந்தைகளும், உங்கள் கர்மாவும்.. ஜோதிடம் மூலம் அறியலாம்!!

முந்தைய பிறவிகளின் சாபங்கள்:- அனைவரும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்  "பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா"  போன்ற ஜோதிட மூல  நூல்களில், எந்த இடத்திலும் தோஷங்கள் என்று குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை. அனைத்தையும் அவர்கள் (ரிஷிகளும், முனிவர்களும், ஜோதிட வித்தகர்களும். )  யோகங்கள் என்றே குறிப்பிடுகின்றனர். 

குழந்தை இன்மைக்கான யோகங்கள்:- 

விதி -1 :- யாரொருவரின் ஜாதகத்தில், புத்திர காரகர் ஆன குரு, லக்கின அதிபதி, 7 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் வீட்டு அதிபதி போன்ற இவர்களின் வலிமை பறிக்கப்பட்டு  உள்ளதோ , அது குழந்தையின்மை யோகத்தை அளிக்கும். 

விதி -2 :- சூரியன், செவ்வாய், ராகு மற்றும் சனி போன்ற கிரகங்கள் முறையாக வலுப்பெற்று 5 ஆம் வீட்டில் இருந்ததென்றால் , மேலும் புத்திர காரகர் ஆகிய குரு,   பலவீனம் அடைந்திருப்பார் என்றால் ; இந்த நிலை குழந்தையின்மை யோகத்தை உயர்த்தும். பொதுவாக சாபங்களை பின்வருவனவற்றால், ஒருவரின் ஜனன ஜாதகத்தைக் 
கொண்டு காணலாம். 

1. லக்கினம், 5 ஆம் வீடு இவற்றின் அதிபதி, புத்திர காரகரான குரு ஆகிய இவர்கள் ஒருவரின் ஜனன  ஜாதகத்தில் வலு இழந்தோ, 6 ,8 , 12 போன்ற தவறான இடத்தில் 
(மறைவிடங்கள்) அமர்ந்தோ இருப்பின் அந்த ஜாதகர் ஏதோ ஒரு சாபத்தினை பெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். 

2. ராகு, செவ்வாய் அல்லது / மற்றும் சனி யுடன் லக்கினம், சந்திரன், 5 ஆம் வீடு, 5 ஆம் வீட்டு அதிபதி அல்லது குருவுடன் தொடர்பு இருப்பின், அந்த ஜாதகர் ஏதோ ஒரு  சாபத்தினை பெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். பலவிதமான சாபங்களால் ஒருவருக்கு ஆண் வாரிசு மறுக்கப்படும். அவை எவ்வாறு என்பதனை பின்வருவனவற்றுள்  காணலாம்.

1. பாம்புகளால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள் :-

(சர்ப சாபம்) ஒரு  பாம்பின் சாபத்தால் ஜாதகருக்கு ஆண் குழந்தைக்கான பாக்கியம்  மறுக்கப்படுகிறது. இந்த வகை குறிப்பானது ராகுவின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும் இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும்.  பாம்பைக் காணவோ அல்லது பாம்பு கடிக்குமோ எனும் பயம் தோன்றலாம். இதனைத் தெளிவாக காண முக்கிய இடம் ஒரு ஜாதகரின் 5 ஆம் இடம் ஆகும். 5 ஆம் வீடு, 5  ஆம் அதிபன் ராகுவுடன் தொடர்பு.

2. பித்ரு சாபம் :-(முன்னோர்கள் -தகப்பனார் / பாட்டனார் / இரண்டாம் பாட்டனார் ..):-

இந்த வகை குறிப்பானது சூரியனின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தந்தையுடன் சரியான உறவு இல்லாமல் போதல், தந்தையின்  அகால மரணம், தந்தையிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய இடங்கள்,  ஒரு ஜாதகரின் 5 ஆம் இடம் 9  ஆம் இடம் மற்றும் 10 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு, 5 ஆம் அதிபதி இவர்கள் 10 ஆம் வீடு , 10 ஆம் அதிபதி மற்றும் சூரியனுடன் இணைந்திருந்தால். 10 ஆம் வீடு, 10  ஆம் அதிபதி, சூரியன் வலு இழந்து 6 , 8 , 12 ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருப்பின்.

3. தாயால் (மாத்ரு சாபம் ) ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள் :-

இந்த வகை குறிப்பானது சந்திரனின் இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தாயுடன் சரியான உறவு இல்லாமல் போதல், தாயின் அகால மரணம், தாயிடம்  இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இதனைத் தெளிவாக காண முக்கிய இடங்கள்,  ஒரு ஜாதகரின் 4ஆம் இடம் 5 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு , 5 ஆம் அதிபதி - 4 ஆம் வீடு அல்லது 4 அதிபதி அல்லது  சந்திரனுடன் தொடர்பு கொண்டிருப்பது. 4 ஆம் வீடு அல்லது 4 ஆம் அதிபதி அல்லது சந்திரன் பலம் குன்றி 6 . 8 . 12 உடன் தொடர்பு கொண்டும்  இருப்பது.  

4. சகோதரரால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது இளைய சகோதரருக்கு செவ்வாயும் , மூத்த சகோதரருக்கு குருவும்,  இருப்பிடம் மற்றும் அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் சகோதர / சகோதரியுடன்  சரியான உறவு இல்லாமல் போதல், சகோதர / சகோதரியிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இந்தச் சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் சகோதர / சகோதரிக்கு இழைத்த தவறுகள் ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய  இடங்கள்,  ஒரு ஜாதகரின் 3 ஆம் இடம் 5 ஆம் மற்றும் 11 ஆம் இடங்களே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 3 / 11 ஆம் வீடு அல்லது 3 / 11 ஆம் அதிபதி  அல்லது செவ்வாயுடன் தொடர்பு கொண்டு இருப்பது.  3 / 11 ஆம் வீடு அல்லது 3 / 11 ஆம் அதிபதி அல்லது செவ்வாய் வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு  பெற்றிருப்பது.

5. தாய் வழி உறவுகளால்  ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, புதனின் மற்றும் சனியின் இருப்பிடம் மற்றும் அதன்  நிலைகளைப் பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு குழந்தை பேறு   இல்லாமல் போகும், தற்போதைய நிலையில் தாய்வழி உறவுகளுடன் சரியான உறவு இல்லாமல்  போதல்,  தாய் வழி உறவுகளிடம் இருந்து பெறும் மகிழ்ச்சி குறைவு போன்றைவைகளே ஆகும். 

இந்த சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் தாய் வழி உறவுகளுக்கு இழைத்த தவறுகள் காரணம் ஆகும். இதனை தெளிவாக காண  முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 5 மற்றும் 6 ஆம் இடமே ஆகும்.5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 6 ஆம் வீடு அல்லது 6 ஆம் அதிபதி அல்லது புதனுடன்  தொடர்பு  கொண்டு இருப்பது. 6 ஆம் வீடு அல்லது 6 ஆம் அதிபதி அல்லது புதன்  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

6. மனைவியால் / பத்தினி (மனைவி)  சாபம் அல்லது பெண்களால் ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, சுக்கிரனின் இருப்பிடம்  மற்றும் முக்கிய அதன் நிலைகளை பொறுத்ததே ஆகும். இதனால் ஜாதகருக்கு தற்போதைய நிலையில், குழந்தை பேறு இல்லாமல் போகும், திருமண தடை; மனைவியால்  மற்றும் பெண்களால் தொல்லைகள், விவாகரத்து, பெண்களால் அவதூறு போன்றைவைகளே ஆகும். 

இந்த சாபம் அமைவதற்கு, மூலகாரணம் முற்பிறவியில் அந்த ஜாதகர், அவர்தம் மனைவி மற்றும் பிற பெண்களுக்கு  இழைத்த தவறுகள் காரணம் ஆகும். இதனை  தெளிவாக காண முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 5 / 7 ஆம் இடமே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 7 ஆம் வீடு அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரனுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. 7 ஆம் வீடு அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன்  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

7. ஆன்மீக நபர்களால் (ப்ரம்ம  (பூசாரி / குருக்கள் /  ஆசிரியர்) ஏற்படும் சாபங்களை குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, குருவின்  இருப்பிடம்  மற்றும் முக்கிய அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும்.  

இதனால் ஜாதகருக்கு தற்போதைய நிலையில், குழந்தை பேறு   இல்லாமல் போகும், ஆசிரியர்களின் கோபத்துக்கு / பிரச்சினைகளுக்கு ஆளாகுதல், வாழ்க்கையில் மகிழ்ச்சி  இன்மை மேலும் பொதுவான அதிருப்தி ,  போன்றைவைகளே ஆகும். இதனைத் தெளிவாக காண முக்கிய இடம்,  ஒரு ஜாதகரின் 9 ஆம் இடமே  மற்றும் 9 ஆம் அதிபதி இருக்கும் இடமுமே ஆகும். 5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி - 9 ஆம் வீடு அல்லது 9 ஆம் அதிபதி அல்லது குருவுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. 9 ஆம் வீடு  அல்லது 9 ஆம் அதிபதி அல்லது குரு  வலிமை குன்றி 6 , 8 , 12 உடன் தொடர்பு பெற்றிருப்பது. 

8. தீய ஆவிகளினால் ஏற்படும் சாபங்களை   குறிகாட்டும் ராசி கட்ட இடங்கள்:-

இந்த வகை குறிப்பானது, சனி, சூரியன், தேய்பிறைச்  சந்திரன்  இவர்களின் இருப்பிடம் மற்றும் முக்கிய அதன் நிலைகளைப் பொறுத்ததே ஆகும். ஒரு நபர், தனது கடமைகளில் ஒன்றான பித்ரு கர்மாக்களை ( தாய்க்கோ / தந்தைக்கோ) போன பிறவியில்  செய்யாமல் இருந்தால், அவ்வாறு பிரிந்த அந்த ஆன்மாக்கள் தீய சக்திகளாக மாறி , அடுத்த பிறவியில் ஆண் குழந்தை பெற மறுக்கப்படுகிறது.

5 ஆம் வீடு அல்லது 5 ஆம் அதிபதி -    சனியுடன்  தொடர்பு கொண்டு இருப்பது. சனி  வலிமை குன்றி   6 , 8 , 12 உடன்  தொடர்பு பெற்றிருப்பது. மேற்கூறியவை அஷ்டவித கர்மாக்கள் ஆகும். முற்பிறவிகளில் நாம் செய்த ஒவ்வொரு செயல்களின் விளைவால் பெற்ற சாபங்களை மட்டுமே குறிப்பிடப்பட்டது . தற்போது நாம் பெறும்  துன்பங்களுக்கும் நாம் வாழும் வாழ்க்கை நிலைகளுக்கும் முற்பிறவியில் செய்த பல்வேறு காரணங்கள் / இணைப்புகள் இருக்கவே செய்யும். 

கடவுளரை வணங்குவதாலும் , தவமியற்றுவதாலும், தானங்கள் செய்வதாலும், நற்செயல்களாலும் முற்பிறவியில் செய்த தவறுகளுக்கான பதிவேடுகளில் இருந்து  சாபங்களை தூக்கியெறிய முடியும். மேலே கூறப்பட்டவை ஒரு சில விதிகளே . அனைத்தையும் இங்கு கூறினால் அது ஜோதிட பயிற்சி வகுப்பு போல் ஆகிவிடும். எனவே  உங்கள் அருகாமையில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை அணுகிச் சிறந்த பரிகாரங்களைப் பெறவும். 

ஒன்று மட்டும் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டும், அதாவது, பரிகாரங்களை செய்வதன் மூலம் நமது ராசி, அம்ச கட்டங்களில் உள்ள கிரக அமர்வு மாற்று நிலையோ ,  பார்வை பலமோ பெற்றுவிட முடியாது. ஆனால் பரிகாரம் செய்யும் காலங்களில் நமது மனம் ஒன்றிணைந்து நம்மை மருத்துவரை நாடல் போன்ற அடுத்த கட்ட  நடவடிக்கைக்கு அழைத்து செல்லும் அல்லது சகித்துக்கொள்ளும் / தாங்கும்  நிலை பெறுவோம். நன்றும் தீதும் பிறர் தடுக்க வாரா, என்பதனை அறிந்து கொள்ளவும்.  விதித்தவை விதி பயனால் அடைவதை அடைந்தே தீருவோம்.  

நற்செயல்களால், இறை வழிபாட்டாலும் தீமையின் பாதிப்புகளை குறைக்கவோ அல்லது அதிலிருந்து மீளவோ செய்ய நம் கையில் / நம் செயல் பாட்டில் தான் உள்ளது. 

கர்மாக்களின் தொடர்ச்சி :-

எப்படி ஒரு கன்று குட்டி தனது தாய் பசுவினை , ஆயிரமாயிரம் பசுக் கூட்டங்களுக்கு நடுவிலே இருந்தாலும் தேடி செல்லுமோ, அதனை  போன்றதே நமது கடந்த பிறவிகளில் செய்த தீ வினைகளின் பதிவு , தற்போது புதிதாக உருவான இப்பிறவியில் அதனை செய்தவரை  தேடி, நாடி வந்து சேரும். 

கர்மாக்களின் தொடர்ச்சியை அறுத்தெறிய அல்லது அதிலிருந்து வெளிவர:- யார் ஒருவர், வெகு காலம் தவ வாழ்வு வாழ்கிறார்களோ, துறவிகளுக்கும் , மகான்களுக்கும்  
சேவை செய்கிறார்களோ, அவர்களாகவே அவர்களின் பாவங்களை (தெரிந்தோ, தெரியாமலோ தமது பாவச்  செயல்களால் ஏற்பட்ட கர்மங்களை / பாவங்களை ) கழுவச்  செய்து , அவர்களின் மனதில் ஏற்படுத்திக் கொண்ட பொருளினை / நிலையை அடைந்து வெற்றிபெறச் செய்கின்றனர். 

எப்படி வான வீதியில் பறக்கும் பறவைகளின் பாதையினை காண இயலாதோ, எப்படி நீரினுள் செல்லும் மீன்களின் பாதையினை காண இயலாதோ, அதே போன்று ஒரு  ஆன்மா தனது கர்ம வினைகளிலிருந்து தான் மீளும் அறிவையும் குறிப்பிடவோ / உணரவோ  இயலாது. 

( மஹாபாரதம் , தொகுதி ...8 , சாந்தி பர்வம் , பாகம் ..1) தொடர்ந்து குல தெய்வ வழிபாடும், பித்ருகளுக்கான  கர்மாக்கள் செய்வதாலும், எந்த இடையூறும் இன்றி அனைத்து  நலனும் பெறுவதோடு, பிரச்சினை இன்றி வாழ்வும் அமையப்பெறுவதை உணர முடியும். அதனைச் செய்த பின்னரும் தொல்லைகள் இருப்பின், ஜோதிடத்தை / ஜோதிடரை  நாடலாம். இது எனது கருத்து மட்டுமல்ல,  அனைத்து ஜோதிட சாஸ்திரங்களும் / ஜோதிடர்களும் கூறுபவைகளாகும்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

சந்தேகங்களுக்கு - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com