கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 
கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் சம்பந்தமாக வெளியூர்ப் பிரயாணம் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள்களாக இருந்துவந்த பிரச்னைகள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட்டு சிலர் அசையாச் சொத்துகளையும் வாங்குவார்கள். அனைத்து விஷயங்களிலும் தைரியமாக செயல்படுவீர்கள். ]

மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.  சிலருக்கு வெளிநாடு சம்பந்தமான விஷயங்களில்  சுமுகமான நல்ல தகவல்கள் வந்துசேரும். சிலருக்கு சுமுகமான ஒப்பந்தங்கள்  கிடைக்கும். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள்.

உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் நண்பர்களுக்கு பயன்படும். தெரியாத தொழிலிலும் தைரியமாக ஈடுபடலாம். அதிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். வாழ்க்கைத்தரம் இந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு  உயர்ந்துவிடும். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்திலுள்ள கஷ்டங்கள் யாவும் படிப்படியாக நிவர்த்தியாகிவிடும். உடலில் பொலிவும் முகத்தில் உற்சாகமும் நேர்கொண்ட பார்வை, மனதில் தெளிவு ஆகியவைகள் உண்டாகும். ஏமாற்ற நினைக்கும் நண்பர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகுவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்கி புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். ரிஸ்க் எடுத்து பொருளாதார வளர்ச்சியை அடைவீர்கள். 

பங்குவர்த்தகத் துறை பலனளிக்கும்.  அரசாங்கத்திலிருந்து பேராதரவு கிடைக்கும். மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். கடமைகளை சரிவர ஆற்றுவீர்கள். முன்யோசனை இல்லாமல் ஒரு செயலைச்செய்துவிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வீர்கள். 

திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு உடனடியாக நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். மனதில் உள்ள பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டாமல் பகைவர்களுடன்  இன்முகத்துடன் பழகுவீர்கள். அனாவசியச் செயல்களைச் செய்ய வேண்டாம். வீண்விவாதங்களிலிருந்து தள்ளி இருக்கவும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக்கொடுப்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் யாவும் சுமுகமாக முடியும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவீர்கள். வேலைகளை கவனம் சிதறாமல் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு சில சலுகைகளைப் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்தவர்கள் தனித்து தொழில் செய்யும் நிலையை காண்பார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பேச்சினால் பகை உண்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும். கைநழுவிப்போன குத்தகைகள் திரும்பக் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சைக் கட்சி மேலிடம் அங்கீகரிக்கும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். குழப்பங்களும் கருத்துவேறுபாடுகள் மறையும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு உயர் கல்வி படிப்பதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் எதற்கும் மனம் தளராமல் கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள். செய்தொழிலையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வீர்கள். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் வருவது வரட்டும் என்கிற தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு உழைத்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்களுடன் நல்ல முறையில் பழகி அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் எந்த சுணக்கமும் ஏற்படாது. பழைய அசையாச் சொத்துகளை விற்று விட்டு புதிய நல்ல சொத்துகளை வாங்குவீர்கள். 

உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை நல்வழிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர் உயரக் காண்பீர்கள். மனநிறைவுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.  எவரையும் எடுத்தெறிந்து பேசமாட்டீர்கள். 

பக்குவமாகவும் கண்ணியத்துடனும் நடந்துகொண்டு உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். அரசு உதவிகள் தேடிவரும். பொதுநலப் பணிகளிலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். முக்கிய காரியங்கள் நிறைவேறக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது. 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறக் காண்பீர்கள். தொழில் வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் கரைந்து உடல் ஆரோக்கியம் உயரத்தொடங்கும். யோகா பிராணாயாம் போன்றவைகளையும் பயின்று உடல்நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள். 

மனதில் உற்சாகம் நிறையும். மனதிற்கினிய பயணங்களையும் செய்வீர்கள். மதிப்பு, அந்தஸ்து உயரும். உடன்பிறந்தோர் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். சமுதாயத்தில் பிரபலஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கையும் மேன்மையடையும். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் கற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடிவரும். செயல்களை வேகமாகவும் விவேகமாகவும் செய்து முடிப்பீர்கள். 

குழந்தைகளின் தவறுகளைப் பக்குவமாகப் பேசி திருத்துவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். விழிப்புணர்ச்சியுடன் இருந்து பாதகங்களை சாதகங்களாக மாற்றிக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழல்களைக் காண்பார்கள். கடமை தவறாமல் உழைப்பீர்கள். தலை நிமிர்ந்து நடந்து தன்னம்பிக்கையுடன் உலா வரும் காலகட்டமிது. வியாபாரிகளின் யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும். 

வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கூட்டாளிகளின் அபிமானத்தையும் பெறுவீர்கள். வங்கியிலிருந்து கடன் கிடைத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவார்கள். கொள்முதல் லாபம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக அமையும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள்.  கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சேரும். முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். புதிய நட்புகள் புதிய வாய்ப்பைப் தேடித்தரும். 

பெண்மணிகள் இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்வீர்கள். ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவமணிகள் புத்திசாலித்தனத்துடன் படிப்பார்கள். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் சுறுசுறுப்பு கூடும். சலிப்பில்லாமல் கூடுதல் கவனத்துடன் உழைப்பீர்கள். இதுவரை தொடர்ந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக மகிழ்ச்சியுடன் செலவு செய்வீர்கள்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எதிரிகளாக இருந்தவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். கோர்ட் வழக்குகளும் சாதகமாக முடிவுபெறும். பல வருடங்களாக கைக்கு கிடைக்க வேண்டிய அசையாச் சொத்து கைவந்து சேரும்.  நல்ல பெயர், புகழ் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் சுமுகமாக பாகப்பிரிவினை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். குறிப்பாக, மூத்த உடன்பிறப்புகளுக்கு வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். 

குழந்தை இல்லாது இருந்தவர்களுக்குக் குழந்தை பிறக்கும். அரசாங்க உதவிகள் சிரமமின்றி கிடைக்கும். அன்னை வழியில் சில நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். மனதில் இருந்த பெருஞ்சுமை இறங்கிவிட்டாற்போல் உணர்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே உதவிகளைச் செய்வீர்கள்.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்கள், கூட்டாளிகளுடன் இருந்த சண்டைச் சச்சரவுகள்  குறைந்து சமாதானம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். வருமானம் சீராக இருக்கும். ஒரு பகுதியை புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். செய்தொழிலில் இருந்த போட்டிகளும் குறையும். நேர்முக மறைமுக எதிர்ப்புகளும் பெருமளவுக்குக் குறைந்துவிடும். வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரத் தொடங்கும். வாங்கும் சக்தி அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சரியான நேரத்தில் ஆகாரம் எடுத்துக் கொள்வீர்கள். தக்க ஓய்வும் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்க தேவையான பணஉதவியும் புதிய நண்பர்களிடமிருந்து தாராளமாகப் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் சமரசமாகச் சென்று சாதகமாக முடித்துக் கொள்வீர்கள். சிலர் புதிய வீடு மனை வாங்குவார்கள். சிலர் வேறு ஊருக்கு மாறிச் சென்று அங்கு வசிக்கும் பாக்கியமும் உண்டாகும். அரசு அதிகாரிகளிடமும் உங்கள் செல்வாக்கு நல்ல முறையில் இருக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பிரச்னைகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வர். வேலைகளை திட்டமிட்டதுபோல் முடிப்பீர்கள். வியாபாரிகள் சுக சௌகர்யங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறிது மந்தமாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும். குத்தகைகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கால்நடைகள் மூலம் வரும் வருமானம் திருப்தி தரும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்படும். மாற்றுக் கட்சியினரும் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். இதனால் மனம் தளர வேண்டாம். கட்சித் தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு பொறுப்பான பதவிகள் வந்து சேரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். தகுதிக்குக் குறைவானவர்களிடம் சேர்க்கை வேண்டாம்.

பெண்மணிகள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது சிறிது யோசித்து எடுக்கவும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் உங்கள் எண்ணங்களைச் சீர்படுத்தி தெளிவாகச் சிந்தித்து படிக்கவும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். நண்பர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் சுறுசுறுப்புடன் ஓடியாடி சம்பாதிப்பீர்கள். செய்தொழிலை அடுத்த நிலைக்கு உயர்த்துவீர்கள். தற்காலிகமாக செய்து வந்த ஒப்பந்தங்களை நிரந்தரமாகச் செய்யத் தொடங்குவீர்கள். என்றோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி இந்த காலகட்டத்தில் வந்தடையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் பரஸ்பர ஒற்றுமை நிலவும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கை வந்து சேரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். அந்த சொத்துகளிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். 

செய்தொழிலுக்கு அரசாங்கத்திலிருந்து எந்த குறுக்கீடும் உண்டாகாது. சமுதாயத்தில் ராஜபாட்டையில் சிறப்பாக பீடுநடை போடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். சவால்களை லாகவமாக எதிர்கொள்வீர்கள். சிலருக்கு திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய பாக்கியம் உண்டாகும். ஞானிகள் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். சிலர் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய சொகுசான  வாகனங்களை வாங்குவீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் உபரி வருமானம்  கிடைக்கும் காலமிது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய அளவு முதலீட்டில் பெரிய அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும்  அவைகள் உங்களை பாதிக்காது. சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று வசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் பேச்சின் உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் சூட்சும அறிவு புலப்படும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு பலிதமாகும். குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். நெடுநாளாக தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். 

குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிவரும். நெடுநாளாக விற்காமலிருந்த பூர்வீகச் சொத்து விற்பனை ஆகும். தனித்து காரியங்களைச் செய்வதை விட  நண்பர்களுடன் சேர்ந்து காரியங்களைச் செய்வதே நல்லது. சமூகத்தில் பொறுப்புகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். குடும்பத்திலும் வெளியிலும் மதிப்பு மரியாதை உயரும். பெற்றோர்களாலும் நன்மைகள் உண்டாகும். அவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தகுதிக்கு மீறி பெரும் அதிர்ஷ்டம் உண்டாகக்கூடிய காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வேலைகளையும் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். சிலர் அலுவலக ரீதியான பயணங்கள் செய்து நற்பெயரெடுப்பார்கள். 
வியாபாரிகள் வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி தடைகளைக் களைந்து செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முதலீடுகளை கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து செயல்படவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பயிர்களில் புழுபூச்சிகளில் பாதிப்பு  தெரியவந்தால் உடனே பூச்சிமருந்துகளை பயன்படுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக வெற்றியைத் தேடித் தரும். இதனால் பெயரும் புகழும் கூடத்தொடங்கும்.  கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை வைத்துக் கொள்வது அவசியம். கலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவார்கள். சக கலைஞர்களால் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

பெண்மணிகள் கணவருடன் சிறப்பான ஒற்றுமையை காண்பார்கள். கணவரின் உறவினர்களிடம் நல்ல பெயரெடுப்பீர்கள். குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். மாணவமணிகள் படிப்பில் வெற்றிவாகை சூடுவார்கள். ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெருகும். விளையாடும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும். 

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

*****

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

*****

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com