செய்திகள்
மாசி மாதப் பௌர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலையில் மாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. மாசி மாதப் பௌர்ணமி திங்கள்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (பிப். 19) இரவு 10.05 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். இரவு 8 மணிக்குப் பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை வரை திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.