திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சீரமைக்கப்பட்ட தங்கத் தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது.
தேரை சீரமைத்து, விரைவில் வெள்ளோட்டம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சுமார் ரூ.6 லட்சம் செலவில் தங்கத் தேர் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்து வைத்தார்.
விழாவில், தமிழக முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் நளினி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.