திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் கீழ்க்குளத்தூர் என்ற கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அகத்தீசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ தொலைவிலும், செய்யாறு - வந்தவாசி சாலையில் 10 கீ.மீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.
அகத்தீசுவரமுடையார் கோயில் கிழக்கு நோக்கியும், கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. மகாமண்டப கிக்குச் சுவரில் ஐந்து துளை உடைய சாளரம் (ஜன்னல்) வழியாகவும் இறைவனைத் தரிசிக்கலாம்.
திருக்கோயிலை முறையாகப் போற்றி பராமரிக்காததால் விமானம் - மகாமண்டபத்தின் மீது செடி, கொடி, மரங்கள் வளர்ந்திருந்தன. கோயிலே தெரியாதவாறு மறைத்திருந்தது திருக்கோயிலைத் திருப்பணி செய்ய முயற்சிகளை அடையாமல் இருந்தது. இக்கோயிலின் நிலைபற்றி அறிந்த சென்னை அண்ணாமலையார் அறப்பணி குழுவினர் 2015-ம் ஆண்டு ஊர் மக்களின் ஒத்துழைப்போடு உழவாரப்பணி மேற்கொண்டனர். கோயில் தூய்மை அடைந்தது. கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இக்கோயில் சோழர்கால கோயில், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜன் போன்ற சோழ அரசர்கள் இக்கோயில் வழிபாட்டிற்காக தானம் அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இவ்வூர் சிறுகுளத்தூர் என பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிகிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்க்குளத்தூர் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வண்ணப்பூச்சுடன் புத்தொளி பெற்று விளங்குகிறது. 16.2.19 அன்று யாகசாலை பூஜைகள் துவங்கின. 18.02.19 அன்று வெகு விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்மக்களும் அருகில் உள்ள கிராமத்தினரும் திரளாக வந்து கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழ்ச்சியும், இறையருளும் பெற்றனர்.
தகவல்: கி.ஸ்ரீதரன்
தொடர்புக்கு: 9786098250