எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் பைரவரை வழிப்பட்டால் யோகம்?

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அஷ்ட லட்சுமிகளும்..
எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் பைரவரை வழிப்பட்டால் யோகம்?

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அஷ்ட லட்சுமிகளும் பைரவரை அஷ்டமியில் வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம் என அனைத்து சுகபோகத்தையும் அடையலாம்.

பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்திராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலைகட்டி, புனுகு சாற்றி, வெண்பொங்கல் நிவேதனம் செய்தால் நலம் பெறலாம்.

சிம்ம ராசிக்காரர்கள்  திங்கட்கிழமையில் வரும் அஷ்டமியில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. மேலும், சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபட கண்நோய் அகலும்.

கடக ராசிக்காரர்கள் எதிர்பாராத விதமாக இழந்துவிட்ட பொருளைத் திரும்பப் பெற, செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவர் ஆலயத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும். மேஷம், விருச்சிக ராசிக்காரர்களும் விரதமிருந்து வழிபாட்டுக்குரிய நாள் இது.

எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி திதி வந்தால் அது மேலும் சிறப்பானது. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளி மலர்களால் வழிபட்டால், நல்ல மக்களைப் பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட வேண்டிய நாள் வியாழக்கிழமை. அன்றைய தினம் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நலம் கிடைக்கும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் விரதமிருப்பது சிறந்ததாகும். மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். சனி பகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று விரதமிருந்து இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும்.

மகரம், கும்ப ராசிக்காரர்கள் தினமும் சாதாரண விளக்குப் போட்டு வழிபடலாம். 64 பைரவ மூர்த்தங்களில் யாருக்கு வேண்டுமானாலும் விளக்கேற்றி வழிபடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com