சந்திரபகவானுக்கு சாப விமோசனம் கிடைத்த தலமாகவும், திருவோண நட்சத்திர தேவி வணங்கி தவம் செய்த தலமாகவும் இது அமைந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில், 107-வது தலமாக திகழ்கிறது.
இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்குப் பரிகார தலமாக உள்ளது. ஒருமுறை சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள்.
இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அதுமுதற்கொண்டு இந்தத்தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரத்தலமாக உள்ளது. இந்த ஆலயத்தைத் தரிசிப்போருக்கு அகங்காரம் நீங்கித் தெளிவு கிடைக்கும். சந்திராஷ்டம தோஷங்கள், மனக் குழப்பங்கள், நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்களும் நிவர்த்தியாகும்.
மேலும், புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் நக்ஷத்திர நாளில் ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேச பெருமாளை தரிசித்தால் வாழ்க்கை மற்றும் கல்விக்கு பிரச்னையாக இருந்துவரும் அகங்காரம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும். திருவோண நட்சத்திரக்காரர்கள் ஒருமுறையாவது இந்த ஆலயத்தை தரிசிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.