ஜயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் ஜயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நிகழாண்டில் ஸ்ரீஆஞ்சநேயர் ஜயந்தி விழா சனிக்கிழமை (ஜன.5) நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் கோயில் பட்டாச்சாரியார்கள் ஈடுபட்டனர். காலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் 11 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்கக் கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜயந்தி அன்று சுவாமியை வழிபடுவதால், குபேர லட்சுமி அருள் கிடைத்து செல்வம் பெருகும், நவக்கிரக தோஷம் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும், கல்வி அறிவு பல மடங்கும் அதிகரிக்கும், மன தைரியம் அதிகரிக்கும், மேலும் அனைத்து பயன்களும் பெற்று புகழுடன் வாழ முடியும் என்பது ஐதீகம்.
போக்குவரத்து மாற்றம்...: இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நாமக்கல் வந்து நாமக்கல் கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியைத் தரிசித்தனர்.
கோட்டை சாலையில் உழவர் சந்தை வரையும், திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் வரையும் பக்தர்கள் வரிசை நீண்டிருந்ததால், நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் போக்குரவத்துக்கு தடை செய்யப்பட்டது. அனைத்து வாகனகங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
1.5 டன்னில் மலர் அலங்காரம்...: ஆஞ்சநேயர் ஜயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நடைபெறுவதுபோல் பிரமாண்டமான மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுமார் 1.5 டன் எடையுள்ள ரோஜா, மல்லிகை, முல்லை, ஜெர்பாரா போன்ற பல்வேறு வகையான மலர்களை பெங்களூரிலிருந்து கொண்டு வந்து மலர்களைக் கோர்த்து கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த அலங்காரத்தைச் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தா. வரதராஜன், கோயில் தக்கார் ரெ.சா. வெங்கடேஷ், செயல் அலுவலர் பெ. ரமேஷ் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.