காமாட்சியின் தர்பாரும் பெரியவாளின் நகைச்சுவை உணர்வும்!
காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சியம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார் மகாபெரியவா.
ஒரு சமயம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தினமும் வித்துவான்கள் பாடுவார்கள்.
விழாவின் ஒருநாள் மாலையில் பெரியவரை தரிசிக்கப் பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
பக்தர்கள் பலர் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம் இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்துவிட்டு வா. அங்குத் தர்பார் நடைபெறுகிறது என்றார்.
எழுத்தாளர் சென்றபோது அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள். பெரியவர் தர்பார் அலங்காரம் என்று தானே சொன்னார்...! இங்கு வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறாளே! என்று குழப்பமடைந்தார்.
அப்போது திடீரென தர்பார் ராகத்தில் இனிய கானம் ஒன்று காதில் வந்து விழுந்தது. பிரபல பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.
அட..! நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்தோம். ஆனால் தர்பார் ராக பாடல் பாடப்படுகிறதே. பெரியவா சொன்னதை இப்படிப் புரிந்துகொண்டோமே! முக்காலமும் உணர்ந்தவர் மகாபெரியவா! அவருடைய நகைச்சுவை உணர்வைப் பற்றி நண்பர்களிடம் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர்.