திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதலாக 22 இடங்களில் ரூ.4.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே கோயில் ஆஸ்தான மண்டபம், திருவாச்சி, கம்பத்தடி மண்டபம் முதல் மூலஸ்தானம் வரை சுமார் 30- க்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இவை கோயில் அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுமார் ரூ.4.50 லட்சம் செலவில் மேலும் 22 இடங்களில் நவீன ரக கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கேமராக்கள் அதிக திறனுடன் துல்லியமாக படம் பிடிக்கக் கூடியவை. மேலும் வெளிச்சம் இல்லாத இருட்டான இடங்களிலும், இரவிலும் படம் பிடிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் அனைத்தும் கோயிலில் உள்ள முக்கியமான இடங்களில் விரைவில் பொருத்தப்பட உள்ளன என கோயில் துணை ஆணையர் மாரிமுத்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.