கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வது படைவீடான இக்கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, சனிக்கிழமை கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மங்கள வாத்தியம் முழங்க விழா கொடி ஏற்றப்பட்டது.
அப்போது, உற்சவர் சண்முகசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உடன் உற்சவ மண்டபத்துக்குப் புறப்பாடு நடைபெற்றது. இரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடரும் விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்தி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டமும், 21ஆம் தேதி தைப்பூச திருவிழாவில் காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளன.