காஞ்சி சங்கர மடம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாவட்ட நீதிபதி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காஞ்சி காமகோடி பீடம் சார்பில், சமத்துவப் பொங்கல், மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை மாலை சங்கரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி சிறப்புரையாற்றினார். விழாவில், கோ பூஜை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, பொங்கல் விழா ஆசியுரையை ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
பின்பு, அரசு குற்றவியல் வழக்குரைஞர் காமேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அதன்பிறகு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு, கிராமத்தினர் பலருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.
இதில், சங்கர மடத்தின் நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள், கிராமத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.