திருமலையில் மாட்டுப் பொங்கலையொட்டி, புதன்கிழமை பார்வேட்டை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாள் அன்று ஏழுமலையான் வனத்துக்கு வேட்டைக்குச் செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி, திருமலையில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.
அதை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலிலிருந்து மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள பார்வேட்டு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அர்ச்சகர்கள் ஆஸ்தானம் நடத்தினர். அதன்பின், மலையப்ப சுவாமி கையில் வில், வாள், கேடயம், கத்தி உள்ளிட்டவற்றை ஏந்திக் கொண்டு, விலங்குகளை வேட்டையாடும் நிகழ்ச்சியை அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் நடத்தினர்.
அதன்பின், மாலை 5 மணிக்கு உற்சவ மூர்த்திகள் கோயிலை வந்தடைந்தனர். இதில், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.