திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வியாழக்கிழமை கிரிவலம் வந்தார். அப்போது, வழிநெடுகிலும் பல ஆயிரம் பக்தர்கள் கூடி நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் திருவூடல் விழாவும் ஒன்று. ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமிகளுக்கு இடையே நடைபெறும் ஊடல், கூடலை விளக்கும் வகையில், இந்தத் திருவிழா பல நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திருவூடல் திருவிழா புதன்கிழமை திருவண்ணாமலையில் உள்ள திருவூடல் தெருவில் நடைபெற்றது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கிரிவலம்: புதன்கிழமை இரவு நடைபெற்ற திருவூடலைத் தொடர்ந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருவண்ணாமலை குமரக் கோயிலுக்கும், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கும் திரும்பிச் சென்று விட்டனர். புதன்கிழமை இரவு முழுவதும் குமரக் கோயிலில் தங்கியிருந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு குமரக் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிநெடுகிலும் பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மறுவூடல் உத்ஸவம்: கிரிவலம் முடிந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு உத்ஸவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குத் திரும்பினார். பிறகு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமிகளுக்கு இடையே மறுவூடல் உத்ஸவம் நடைபெற்றது.
மறுவூடலுக்குப் பிறகு ஸ்ரீஉண்ணாமுலையம்மனுடன் காட்சியளித்த ஸ்ரீஅருணாசலேஸ்வரரை கோயிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.