கூரத்தாழ்வார் மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் பகுதியில் வசித்தவர் ஸ்ரீவத்சாங்கர். இவர் ராமானுஜரின் முதன்மைச் சீடராக கூரத்தாழ்வார் என்று அழைக்கப்பட்டவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வழிபட வரும் பக்தர்களுக்கு, நாள்தோறும் அன்னதானம் செய்வதை பெரும் பேறாகக் கருதி வாழ்ந்தவர். தனது பெரும் செல்வம் அனைத்தையும் அறச் செயல்களுக்கு தானமாக வழங்கி, ராமானுஜரை சரணடைந்தவர்.
பெருமாளின் தீவிர பக்தரான அவருக்கு, காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் கிராமத்தில் ஆதிகேசவப் பெருமாள், கூரத்தாழ்வார் கோயில் உள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தைமாதம் கூரத்தாழ்வார் திரு அவதார மகோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு 1009-ஆவது திரு அவதார மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது, உற்சவரின் ஆஸ்தான புறப்பாடும், இரவு வேளையில் சிம்ம வாகனப் புறப்பாடும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 10 நாள்களும் விசேஷ உற்சவம் நடைபெறும். இதில், காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் திருப்பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் கூரத்தாழ்வார் எழுந்தருளி வீதியுலா வருவார்.
உற்சவத்தின் 9-ஆவது நாளான வரும் 25-ஆம் தேதி காலையில் தேரோட்டம் விமரிசையாக நடத்தப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கிராமத்தினரும் செய்து வருகின்றனர்.