தேசிய மருத்துவர் தினம்: உங்க ஜாதகத்தில் மருத்துவராகும் அமைப்பு இருக்கா?

உலகம் முழுவதும் மருத்துவம் ஒரு உன்னதமான தொழிலாகக் கருதப்படுகிறது.
தேசிய மருத்துவர் தினம்: உங்க ஜாதகத்தில் மருத்துவராகும் அமைப்பு இருக்கா?

உலகம் முழுவதும் மருத்துவம் ஒரு உன்னதமான தொழிலாகக் கருதப்படுகிறது. உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கி இருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவரே. இந்தியச் சூழலில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் குறிப்பாகக் கிராமப் புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். மருத்துவர்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது நாட்டின் இன்றியமையாதத் தேவையாக உள்ளது. நாட்டிற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் பல நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர் தினத்தைக் கடைப்பிடிக்கின்றன. இந்தியாவில் இது ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறர் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய மருத்துவர்கள் தங்களது சிறந்த முயற்சியை அளிக்கின்றனர்.

இந்தியாவில் மருத்துவர் தின வரலாறு

இந்தியா பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் ஒருவரே புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). அவரது நினைவைப் போற்றும் வண்ணமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவருக்குப் புகழாரம் சூட்ட, 1991-ம் ஆண்டிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் பல நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தொடங்கி இந்திய சமுதாய வளர்ச்சிக்காகப் பல நன்மைகளை ஆற்றினார்.

மருத்துவமும் ஜோதிடமும்

உலகில் மருத்துவரையும் ஜோதிடரையும் மட்டுமே தெய்வத்தோடு இணைத்து வேதங்களும் இதிகாசங்களும் போற்றுகிறது. ஓருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரை அணுகும்போது "உங்களைத்தான் தெய்வமாக நம்பியிருக்கிறோம். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என கூறுவதை நாம் பார்க்கிறோம். ஜோதிடரை "தெய்வக்ஞன்" என வேதம் போற்றுகிறது. அந்த காலங்களில் மருத்துவருக்கு ஜோதிடமும் ஜோதிடருக்கு மருத்துவமும் தெரிந்திருக்கும். மருத்துவ ஜோதிடம் என்று ஜோதிடத்தில் ஒரு சிறப்புப் பிரிவு இருப்பது இதற்கு சான்றாகும்.

பிள்ளைகளைப் பெற்ற அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக உருவாக்க வேண்டும் என்பதே முதல் உள்ள பொதுவான மற்றும் நியாயமான ஆசை மற்றும் லட்சியமாக இருக்கும். போனால் போகிறதென்று சிலர் பொறியியல் வல்லுநராக உருவாக்க லட்சியமாகக் கொள்கின்றனர். எவ்வளவோ பேர் மருத்துவ படிப்பிற்காக முயற்சித்தாலும் ஒரு சிலருக்கே அது சாத்தியமாகிறது. மற்றவர்களுக்கு அது எட்டாக் கனி ஆகிவிடுகிறது. மருத்துவர் ஆனாலும் பொறியியல் வல்லுனர் ஆனாலும் ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்று இருக்க வேண்டும்.

மருத்துவராகும் ஜாதக அமைப்பு

ஒருவர் மருத்துவத்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாகவும் சந்திரன் பலமிழந்தும் ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.

1. ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்மகாரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.

2. இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய். 

3. மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும், பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் எனப் போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.

5. ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றைக் குறிக்கின்ற கிரகம். 

6. மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தன்மையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆக்கையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு-கேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 

7. ஒருவர் மருத்துவர் ஆவதற்கும் மருந்து மாத்திரை மற்றும் ரசாயனங்கள், விஷங்கள் போன்றவற்றைக் கையாள்வதற்கும் அவருடைய ஜாதகத்தில் சந்திர பகவான் நீசமடைந்தோ அல்லது லக்னத்திற்க்கு 6/8/12 வீட்டில் நின்று அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்து நின்று அசுபத்தன்மை அடைந்தோ அல்லது ராகு/கேது போன்ற சர்ப கிரகங்களின் தொடர்பு பெற்றோ நிற்க வேண்டும்.

மருத்துவ படிப்பு யாருக்கு?

1. மருத்துவ படிப்பிற்கு லக்னம் ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும். இவற்றில் உள்ள கிரகங்களைப் பொருத்து மருத்துவ பிரிவு அமையும்.

2. சூரியன், செவ்வாய், புதன் மற்றும் குருவின் தொடர்பு ஒன்று ஐந்து ஒன்பதாம் பாவங்களுக்கு ஏற்பட வேண்டும்.

3. மருத்துவராகத் தொழில் புரிய லக்னம் இரண்டாமிடம் ஆறாமிடம் பத்தாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும்.

4. மருத்துவராகும் கிரக அமைப்பைப் பெற்று ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தைக் கொண்டு அவர் எந்த பிரிவில் சேவை செய்வார் என்பதை அறியலாம்.

5. பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்திலிருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்குக் கல்வி செல்வத்தைத் தருகின்றன. மேலும், வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.

வைதீஸ்வரனும் மருத்துவ கல்வியும்

ஜாதகத்தில் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ படிப்பிற்குத் தெய்வ அருளும் வேண்டுமல்லவா? எந்த தெய்வத்தை வணங்கினால் மருத்துவம் படிக்கலாம்? வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அருள்மிகு வைத்யநாத ஸ்வாமிதாங்க!

வைத்தீஸ்வரன் கோவில்

காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில். பெயரிலிருந்தே வைத்தியத்தோடு தொடர்புடைய ஸ்தலம் என அறியலாம். இது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம் ஆகும். இப்ப தெரியுதா மருத்துவ படிப்பிற்கு செவ்வாயின் அருள் வேண்டும் என்பது. அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம். 

கோயில் அமைப்பு

நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. செவ்வாயின் நாயகன் அங்காரகன் தனது அங்கத்தில் ஏற்பட்ட தொழுநோயை போக்கிக்கொள்ள இக்கோவிலில் உறையும் சிவனாரிடம் அடைக்கலம் அடைந்ததாகவும், நோய் நீங்கப்பெற்று உய்வு பெற்றதாகவும் வரலாறு. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர் வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்! அதை மனதில் கொள்க!

இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்குச் சென்று வரலாம். ஒருமுறை சைவ குறவர்களில் திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவிலுக்குச் சென்று வைத்தியநாத ஸ்வாமி என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத்தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!

ஆகவே மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களும் மருத்துவம் படித்துவிட்டு தொழில் தொடங்க நினைப்பவர்களும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமியின் அருள்பெற்று அதோடு மருத்துவத்தின் காரகன் அங்காரகனின் அருளையும் பெற்றால் மருத்துவ படிப்பும் தொழிலும் சிறப்பாக அமைந்து அத்துறையில் சாதிக்க இயலும் என்பது நிதர்சனம்.

மருத்துவ கல்வி படிக்க அங்காரகனின் அருளோடு அருள்மிகு வைத்தியநாதரின் அருளும் தேவையாகும். செவ்வாய்க்கிழமையில் வைதீஸ்வரனை வணங்குவது அவர் அருளைப் பெறச் சிறந்த வழியாகும். வைதீஸ்வரன் கோயில் தமிழகத்தில் பலருக்கும் குலதெய்வமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com