அத்திவரதர் பெருவிழாவையொட்டி 3-வது நாளான இன்று பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ மாலையுடன் ஆதி அத்திவரதர் காட்சியளிக்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ள இவ்விழாவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்ய நாடு முடிவதிலுமிருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர்.
இரண்டாவது நாளான நேற்று அத்திவரதர் நீல வண்ண அரக்கு பட்டு ஆடையில் பக்தர்களுக்கு தெய்வாம்சக் காட்சியுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். இந்த அரிய காட்சியை காண அலை அலையாய் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.
தொடர்ந்து, மூன்றாவது நாளாக இன்று பச்சைப்பட்டு உடுத்தி மல்லிகைப்பூ மாலையுடன் ஆதி அத்திவரதர் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.