சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மதியம் பார்வேட்டு உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள இக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் முடிந்து 48 நாள் மண்டல பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயிலில் கடந்த 3 தினங்களாக சாட்சாத்கார வைபவ உற்சவம் நடைபெற்றது. அப்போது உற்சவர்கள் பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் மாடவீதியில் வலம் வந்தனர்.
சீனிவாசமங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பாதை வழியாகவே பெருமாள் திருமலைக்குச் சென்று வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
முனிவர்களும், ரிஷிகளும் இந்த வழியாகவே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே இப்பாதை வழியாக பார்வேட்டு எனப்படும் வேட்டையாடும் உற்சவத்தை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.
இதற்காக கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலிலிருந்து உற்சவர்கள் ஸ்ரீவாரிமெட்டு பாதையில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆராதனை செய்யப்பட்டு, நைவேத்தியம் படைக்கப்பட்டது.
அதன்பின் உற்சவமூர்த்திகள் கையில் வாள், வில், கேடயம் உள்ளிட்டவற்றை தரித்து வனவிலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அர்ச்சகர்கள், அதிகாரிகள் இணைந்து நடத்தினர். இதைக் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாலையில் உற்சவர்கள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.