காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 11-ம் நாளான இன்று ஆனி மாத கருடசேவை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பதினொறாவது நாளான இன்றும் கூட்டம் கணிசமாக அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், ஆனி மாத உற்சவத்தையொட்டி இன்று(ஜூலை 11) கருட சேவை நடைபெறுகிறது. இதனால், இன்று ஒருநாள் மட்டும் மாலை 5.00 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.