திருப்பதியில் பல அடுக்கு கார் நிறுத்துமிடத்தை அமைக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து மலைக்குச் செல்கின்றனர். அதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. தற்போது ரயில், பேருந்துகளைத் தவிர்த்து சொந்த வாகனங்களிலும், தனியார் வாடகை வாகனங்களிலும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ற வகையில் திருப்பதியில் வாகன நிறுத்துமிடம் இல்லை.
வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கிடைக்கும் இடங்களில் நிறுத்துவதால், மிக முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், வாடகை அறை வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க வாகனங்களை நிறுத்த பல அடுக்கு கார் நிறுத்துமிட வசதியை உருவாக்க வேண்டும் என்று திருப்பதி நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்ரவிட்டுள்ளார்.