காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 11-வது நாளான இன்று காவி நிற பட்டாடை உடுத்திப் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார் எம்பெருமான்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்திவரதரை தரிசனம் செய்ய நாளை (ஜூலை 12) தமிழக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் காஞ்சிபுரம் வருகை தருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜூலை 23-ம் தேதி பிரதமர் மோடி அத்திவரதரை தரிசிக்க உள்ளார்.
இதற்காக, சிறப்புத் தரிசனம் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி காஞ்சிபுரத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.